திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்றி வைத்து குளறுபடி அ.ம.மு.க. வேட்பாளர் சாருபாலா குற்றச்சாட்டு


திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்றி வைத்து குளறுபடி அ.ம.மு.க. வேட்பாளர் சாருபாலா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 18 April 2019 11:00 PM GMT (Updated: 18 April 2019 8:13 PM GMT)

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்றி வைத்து திட்டமிட்டே குளறுபடி செய்ததாக அ.ம.மு.க. வேட்பாளர் சாருபாலா குற்றம் சாட்டினார்.

திருச்சி,

திருச்சி நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், தே.மு.தி.க., அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் உள்பட 24 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர் பெயர், புகைப்படம், சின்னம் ஆகியவை பொருத்தப்பட்டு, 24 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் ஒரு வாக்குச்சாவடிக்கு 2 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.

ஒரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் தே.மு.தி.க. வேட்பாளர் இளங்கோவன், காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் உள்பட 16 வேட் பாளர்களின் பெயர், புகைப்படம், சின்னமும், மற்றொரு எந்திரத்தில் முதல் இடத்தில், அதாவது 17-வது வேட்பாளராக அ.ம.மு.க. வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் உள்பட 8 வேட்பாளர்களின் பெயர், புகைப்படம் மற்றும் சின்னமும் இடம் பெற்றுள்ளது. 25-வது இடத்தில் ‘நோட்டா’ இடம் பெற்றுள்ளது.

சாருபாலா வாக்களித்தார்

திருச்சி செயின்ட் ஜான்ஸ் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் நர்சரி-பிரைமரி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் அ.ம.மு.க. வேட்பாளர் சாருபாலா, நேற்று காலை தனது கணவர் ராஜகோபால தொண்டைமான், மகன் பிரித்விராஜ், மகள் ராதா நிரஞ்சனி ஆகியோருடன் வரிசையில் நீண்டநேரம் காத்திருந்து வாக்களித்தார்.

பின்னர் நிருபர்களிடம் சாருபாலா கூறியதாவது:-

நான் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. டி.டி.வி.தினகரனின் பணி இந்த இயக்கத்திற்கு மிக சிறப்பாக இருக்கிற காரணத்தால், தமிழகம் முழுவதும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு மிக சிறப்பான வரவேற்பு இருக்கிறது. இதனால், எங்களுக்கு ஓட்டுப்பதிவும் மிக அதிக அளவில் இருக்கும் என்று நம்புகிறேன். இன்றைக்கு இருக்கிற ஆளுங்கட்சிக்கு எதிராக மக்கள் வாக்களித்து வருகிறார்கள் என்பது மிக நன்றாக தெரிகிறது.

குளறுபடி செய்து சதி

தமிழகம் முழுவதும் நாங்கள் வெற்றி பெற்று விடக்கூடாது என்பதற்காக என்னென்ன இடையூறுகள் செய்ய வேண்டுமோ அதை செய்து வருகிறார்கள். ஆர்.கே.நகரில் டி.டி.வி.தினகரன் வெற்றியை தடுக்க வாக்குப்பதிவு எந்திரத்தை மாற்றி வைத்து சதி செய்தனர். அதுபோல தற்போது திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை, திருவெறும்பூர், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பல இடங்களில் 2-வது இடத்தில் இருக்கக்கூடிய வேட்பாளர் பெயர், சின்னம் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை முதலில் வைத்தும், முதலில் இருக்கக்கூடிய 1-ல் இருந்து 16 வரை வேட்பாளர் பெயர் அடங்கிய எந்திரத்தை 2-வது இடத்தில் வைத்தும் குளறுபடி செய்ததாக பல புகார்கள் வந்தன.

இது தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டரிடம் புகார் தெரிவித்தேன். அதற்கு அவர், அப்படி வைப்பதற்கு வாய்ப்பில்லை. இருந்தாலும் ஏதாவது தவறு நடந்திருந்தால் உடனடியாக மாற்றி வைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இது திட்டமிட்ட சதி. நாங்கள் வெற்றி பெற்று விடுவோம் என்ற பயத்தைத்தான் இது காட்டுகிறது. சின்னம் கொடுப்பதில் குளறுபடி செய்து மக்களை சந்திக்க விடாமல் காலதாமதம் ஏற்படுத்தினர். இவற்றையெல்லாம் தாண்டி நாங்கள் 40 தொகுதிகளிலும் தனித்து நின்று தேர்தலை சந்திக்கிறோம். சிறப்பான வெற்றியை பெறுவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story