திருக்கடையூர் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை போலீசார் விசாரணை


திருக்கடையூர் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 21 April 2019 11:00 PM GMT (Updated: 21 April 2019 6:03 PM GMT)

திருக்கடையூர் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருக்கடையூர்,

திருக்கடையூர் அருகே பிள்ளைபெருமாள்நல்லூர் ஊராட்சி நடுத்தெருவை சேர்ந்தவர் சத்தியராஜ் (வயது 31). தொழிலாளி. இவருக்கு திருமணமாகி ராஜேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவர், குடும்ப பிரச்சினை காரணமாக தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

இதனால் தனிமையில் இருந்துவந்த சத்தியராஜ், கடந்த 13-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடி பார்த்தும் சத்தியராஜை காணவில்லை.

இந்தநிலையில் பிள்ளை பெருமாள்நல்லூரில் தனியாருக்கு சொந்தமான அனல்மின் நிலையம் உள்ளது. இந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் வழக்கம் போல் நேற்று வேலைக்கு வந்தனர். அப்போது அங்கு துர்நாற்றம் வீசியது. இதனால் வேலைக்கு வந்த தொழிலாளர்கள் அங்கு சென்று பார்த்த போது, அனல்மின் நிலைய சுற்றுச்சுவர் உட்புறம் உள்ள ஒரு மரத்தில் தூக்கில் பிணமாக ஒருவர் தொங்குவதை கண்டனர். உடனே இதுகுறித்து பொறையாறு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தூக்கில் தொங்கியவரின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர், காணாமல் போன சத்தியராஜ் என்பது தெரியவந்தது. உடல் அழுகிய நிலையில் இருந்ததால் டாக்டர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பிரேத பரிசோதனை செய்து, சத்தியராஜின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக பொறையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து, சத்தியராஜ் தற்கொலை செய்து கொண்டதற்கு என்ன காரணம்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story