அவதூறு ஆடியோவால் கலவரம்: 2 நாட்களுக்கு பிறகு பொன்னமராவதியில் இயல்பு வாழ்க்கை திரும்பியது


அவதூறு ஆடியோவால் கலவரம்: 2 நாட்களுக்கு பிறகு பொன்னமராவதியில் இயல்பு வாழ்க்கை திரும்பியது
x
தினத்தந்தி 21 April 2019 11:00 PM GMT (Updated: 21 April 2019 7:39 PM GMT)

அவதூறு ஆடியோ தொடர்பாக ஏற்பட்ட கலவரத்தால் பதற்றமான நிலையில் காணப்பட்ட பொன்னமராவதியில் 2 நாட்களுக்கு பிறகு இயல்பு வாழ்க்கை திரும்பியது.

புதுக்கோட்டை,

தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியின் சுயேச்சை வேட்பாளரான செல்வராஜையும், அவர் சார்ந்த சமூகத்தையும் 2 பேர் அவதூறாக பேசும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அந்த ஆடியோவை வெளியிட்ட 2 பேரையும் கைது செய்ய வேண்டும் எனக்கூறி கடந்த 18-ந் தேதி இரவு அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் பொன்னமராவதி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் நடவடிக்கை எடுக்க தாமதம் ஆனதால், அவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் மறுநாள் (19-ந் தேதி) காலையில் மீண்டும் அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள், அவதூறாக பேசி ஆடியோ வெளியிட்ட 2 பேரையும் கைது செய்ய வலியுறுத்தி பொன்னமராவதி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் போலீஸ் நிலையம், போலீசார் மற்றும் போலீஸ் வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினார்கள்.

இதில் 6 போலீஸ் வாகனங்கள் சேதமடைந்தன. மேலும் 3 போலீசார் உள்பட 13 பேர் காயமடைந்தனர். இதையடுத்து பொன்னமராவதி தாலுகாவுக்கு உட்பட்ட கிராமங்களில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பொன்னமராவதி, திருமயம், அன்னவாசல், புதுக்கோட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் பொன்னமராவதி தாசில்தார் பாலகிருஷ்ணன், பொன்னமராவதி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் நேற்று முன்தினம், கலவரத்தில் ஈடுபட்ட பொன்னமராவதி மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரம் பேர் மீது பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியது, அரசு வாகனங்களை சேதப்படுத்தியது உள்பட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றும் பாதுகாப்பு பணிக்காக துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில் போலீசார் பொன்னமராவதி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் குவிக்கப்பட்டு உள்ளனர். மேலும் நேற்று காலை முதல் பொன்னமராவதிக்கு வரும் அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பொன்னமராவதியில் உள்ள அனைத்து கடைகளும் நேற்று திறக்கப்பட்டன.

இதன் மூலம் பொன்னமராவதியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியது. வழக்கம்போல் பொன்னமராவதி பஸ் நிலைய பகுதி நேற்றும் பரபரப்பாக காணப்பட்டது. இது குறித்து போலீசார் கூறுகையில், பொன்னமராவதி பகுதியில் தற்போது உள்ள நிலவரம் கட்டுப்பாட்டில் உள்ளதால், 144 தடை உத்தரவை நீட்டிக்க வாய்ப்பு இல்லை, என்றனர். 

Next Story