ஆடியோ வெளியிட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி 5 இடங்களில் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


ஆடியோ வெளியிட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி 5 இடங்களில் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 21 April 2019 11:00 PM GMT (Updated: 21 April 2019 8:11 PM GMT)

அவதூறாக பேசியதாக ஆடியோ வெளியிட்டவர்களை கைது செய்யவலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கறம்பக்குடி,

ஒரு சமூகத்தை சேர்ந்த பெண்களை அவதூறாக பேசி சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட 2 பேரையும் கைது செய்ய வலியுறுத்தி நேற்று புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள மருதன்கோன்விடுதி 4 ரோட்டில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதுகுறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மோகன்தாஸ், நாகராஜ் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கறம்பக்குடி-தஞ்சாவூர் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதேபோல அறந்தாங்கி அருகே உள்ள ராஜேந்திரபுரத்தில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்று. இது குறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு கோகிலா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். இதனால் அறந்தாங்கி-பட்டுக்கோட்டை சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதேபோல அறந்தாங்கி அருகே உள்ள வடுகாடு, மேலப்பெருங்காடு ஆகிய 2 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். இதனால் அறந்தாங்கி-நாகுடி சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஆவுடையார்கோவில் அருகே உள்ள பரமந்தூரில் சாலை மறியல் நடைபெற்றது. இது குறித்து தகவல் அறிந்த ஆவுடையார்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Next Story