வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறைகளில் கலெக்டர் ஆய்வு


வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறைகளில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 22 April 2019 11:00 PM GMT (Updated: 22 April 2019 5:37 PM GMT)

வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறைகளில் நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை,

கடந்த 18-ந் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரியில் பாதுகாப்பான அறைகளில் வைக்கப்பட்டு, அந்த அறைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி கல்லூரியில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறைகள் முன்பாக துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படை வீரர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரியும், நாகை மாவட்ட கலெக்டருமான சுரேஷ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் ஆகியோர் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார், நிருபர்களிடம் கூறியதாவது:-

வேட்பாளர்களின் முகவர்கள் போலீஸ் பாதுகாப்பை பார்வையிட வசதியாக அவர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் கட்டுப்பாட்டு அறை வரை செல்லலாம். அறைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளதை பார்த்து உறுதி செய்து கொள்ளலாம். கட்டுப்பாட்டு அறையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டையும் முகவர் சோதித்து பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது மாவட்ட வருவாய் அதிகாரி இந்துமதி, மயிலாடுதுறை உதவி கலெக்டர் கண்மணி, துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை, தாசில்தார் மலர்கொடி ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story