புதுவை என்ஜினீயரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது


புதுவை என்ஜினீயரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது
x
தினத்தந்தி 22 April 2019 10:45 PM GMT (Updated: 22 April 2019 7:53 PM GMT)

புதுவை என்ஜினீயரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.

புதுச்சேரி,

புதுவை அரியாங்குப்பம் சுப்பையா நகர் பாரதி வீதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 39). இவர் தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.

கடந்த 13-ந்தேதி இரவு இவர் வேல்ராம்பட்டை சேர்ந்த தனது நண்பர் ஜெயச்சந்திரனுடன் அரியாங்குப்பத்தில் இருந்து மோட்டார்சைக்கிளில் புதுச்சேரி நோக்கி வந்துகொண்டிருந்தார். அவர்கள் முருங்கப்பாக்கம் பகுதியில் வந்தபோது செல்போனில் அழைப்பு வரவே ராமமூர்த்தி மோட்டார்சைக்கிளை நிறுத்தி பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக 2 மோட்டார்சைக்கிளில் வந்த 4 பேர் ராமமூர்த்தி மற்றும் ஜெயச்சந்திரனை மிரட்டி அவர்களிடமிருந்து செல்போன், 1½ பவுன் தங்க செயின் மற்றும் மோட்டார்சைக்கிளை பறித்துக்கொண்டு சென்றுவிட்டனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் முதலியார்பேட்டை பழைய மார்க்கெட் வீதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (வயது 22) அவருடைய நண்பர்களான கிரி, பிரேம், தமிழ் ஆகியோருடன் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தமிழ்ச்செல்வனை போலீசார் கைது செய்தனர். மேலும் என்ஜினீயரிடம் அவர் வழிப்பறி செய்த மோட்டார்சைக்கிள், செல்போன் மற்றும் அவர் பயன்படுத்திய மோட்டார்சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மற்றவர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.

Next Story