தனித்தனி சம்பவத்தில் நெசவு தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை


தனித்தனி சம்பவத்தில் நெசவு தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 22 April 2019 9:45 PM GMT (Updated: 22 April 2019 7:54 PM GMT)

தனித்தனி சம்பவத்தில் நெசவு தொழிலாளி உள்பட 2 பேர் தூக்குப்போடு தற்கொலை செய்துகொண்டனர்.

பாகூர்,

புதுவை ஆலங்குப்பம் சஞ்சீவி நகரை சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது 54). நெசவு தொழிலாளி. இவரது சொந்த ஊர் கரூர் ஆகும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்துடன் சஞ்சீவி நகருக்கு வந்த அவர், அங்கேயே நெசவுக்கூடம் அமைத்து தொழில் செய்து வந்தார். இதற்காக அவர் பலரிடம் கடன் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் அதை திருப்பி கேட்டனர். ஆனால் அவரால் கொடுக்க முடியவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஜெகதீசன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பாகூர் அருகே பின்னாச்சிக்குப்பத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 73). இவருக்கு தேவி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். கிருஷ்ணமூர்த்தி, தனக்கு வரும் முதியோர் உதவித்தொகையை மது குடித்து செலவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் கிருஷ்ணமூர்த்தி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். இதை அவரது மனைவி தேவி கண்டித்தார். இதனால் கோபமடைந்த அவர், வீட்டை விட்டு வெளியே சென்றார். குடிபோதையில் சென்றவர், போதை தெளிந்ததும் வந்துவிடுவார் என்று அவரது குடும்பத்தினர் இருந்தனர்.

இந்த நிலையில் அங்குள்ள காலி மனையில் உள்ள மரத்தில் கிருஷ்ணமூர்த்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்த பாகூர் போலீசார் விரைந்து சென்று, கிருஷ்ணமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story