மராட்டியத்தில் 3-ம் கட்ட நாடாளுமன்ற தேர்தல் 14 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்


மராட்டியத்தில் 3-ம் கட்ட நாடாளுமன்ற தேர்தல் 14 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
x
தினத்தந்தி 22 April 2019 11:30 PM GMT (Updated: 22 April 2019 11:32 PM GMT)

மராட்டியத்தில் 3-ம் கட்டமாக புனே உள்பட 14 நாடாளுமன்ற தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. தேர்தலை அமைதியாக நடத்த பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

மும்பை,

மராட்டியத்தில் 4 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடந்து வருகிறது. கடந்த 11-ந் தேதி 7 தொகுதிகளுக்கு முதல் கட்டமாகவும், 18-ந் தேதி 10 தொகுதிகளுக்கு 2-ம் கட்டமாகவும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

3-வது கட்டமாக ஜல்காவ், ராவேர், ஜல்னா, அவுரங்காபாத், ராய்காட், புனே, பாராமதி, அகமதுநகர், மாதா, சாங்கிலி, சத்தாரா, ரத்னகிரி-சிந்துதுர்க், கோலாப்பூர், ஹட்கனங்கலே ஆகிய 14 தொகுதிகளுக்கு இன்று(செவ்வாய்க்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தொகுதிகளில் மொத்தம் 249 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 19 பெண் வேட்பாளர்களும் அடங்குவர்

புனே மற்றும் மாதா தொகுதிகளில் அதிகபட்சமாக தலா 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். குறைந்தபட்சமாக சத்தாராவில் 9 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

ஜல்னாவில் பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் ராவ்சாகேப் தன்வே போட்டியிடுகிறார்.

இதேபோல் ராய்காட் தொகுதியில் மத்திய மந்திரி ஆனந்த் கீதே (சிவசேனா), அவரை எதிர்த்து போட்டியிடும் சுனில் தத்காரே(தேசியவாத காங்கிரஸ்), ரத்னகிரி- சிந்துதுர்க் தொகுதியில் முன்னாள் முதல்-மந்திரி நாராயன் ரானே மகன் நிலேஷ் ரானே (மகாராஷ்டிரா சுவாபிமானி), புனேயில் மாநில மந்திரி கிரிஷ் பாபத் (பா.ஜனதா), பாராமதி தொகுதியில் சரத்பவார் மகள் சுப்ரியா சுலே (தேசியவாத காங்கிரஸ்), அகமது நகர் தொகுதியில் காங்கிரஸ் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராதாகிருஷ்ண விகேபாட்டீலின் மகன் சுஜய் விகேபாட்டீல்(பா.ஜனதா), ஹட்கனங்கலே தொகுதியில் சுவாபிமானி பக்சா கட்சியின் தலைவர் ராஜூ ஷெட்டி ஆகியோர் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.

மொத்தமாக 14 தொகுதிகளிலும் 2 கோடியே 57 லட்சத்து 89 ஆயிரத்து 738 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1 கோடியே 33 லட்சத்து 19 ஆயிரத்து 10 பேர் ஆண்கள். 1 கோடியே 24 லட்சத்து 70 ஆயிரத்து 76 பேர் பெண்கள் ஆவர். 652 பேர் மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்கள்.

மொத்தம் 28 ஆயிரத்து 691 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

மேலும் 56 ஆயிரத்து 25 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 35 ஆயிரத்து 562 கட்டுப்பாட்டு எந்திரங்கள் மற்றும் 37 ஆயிரத்து 524 விவிபாட் எந்திரங்கள் தேர்தலுக்கு பயன்படுத்தப்படுகிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடக்கிறது.

தேர்தல் பணியாளர்கள் நேற்று இரவில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கும் சென்று சேர்ந்தனர்.

தேர்தலை அமைதியான முறையில் நடத்த பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

மராட்டியத்தில் இறுதிக்கட்டமாக 17 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வரும் 29-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

Next Story