விவசாயிகள் கோடை உழவின் மூலம் படைப்புழுவின் தாக்கத்தை கட்டுப்படுத்தலாம் வேளாண் அதிகாரி தகவல்


விவசாயிகள் கோடை உழவின் மூலம் படைப்புழுவின் தாக்கத்தை கட்டுப்படுத்தலாம் வேளாண் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 23 April 2019 10:54 PM GMT (Updated: 23 April 2019 10:54 PM GMT)

கோடை உழவின் மூலம் படைப்புழுவின் தாக்கத்தை கட்டுப்படுத்தலாம் என்று மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கூறினார்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கனகசபை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 61 ஆயிரத்து 625 ஹெக்டேர் பரப்பளவில் மானாவாரியில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டது. அவற்றில் படைப்புழுவின் தாக்குதல் காணப்பட்டது. முந்தைய பயிரில் உள்ள படைப்புழுவின் கூட்டுப்புழுவானது அறுவடை செய்த மக்காச்சோளப்பயிர் தண்டுப்பகுதி மற்றும் மண்ணில் அதிகம் இருக்க வாய்ப்புகள் இருப்பதால் அனைத்து விவசாய பெருமக்களும், சென்ற ஆண்டு பயிரிடப்பட்ட மக்காச்சோளப்பயிரின், தண்டு, இலை இவைகளை அப்புறப்படுத்திவிட வேண்டும். மேலும் கோடை உழவு செய்து மண்ணில் உள்ள கூட்டுப்புழுக்களை அழித்துவிடலாம். கோடை உழவு செய்வதன் மூலம் மண்ணின் உள்பகுதியில் உள்ள கூட்டுப்புழுவானது வெளியில் கொண்டுவரப்பட்டு அதிக வெயிலின் காரணமாக இறந்து விடுகிறது. மேலும் அவை பறவைகளுக்கு இறையாகின்றன. கோடை உழவு செய்வதன் மூலம் அடுத்து சாகுபடி செய்யும் பயிர்களில் இந்த பூச்சிகளின் தாக்குதலை வெகுவாக கட்டுப்படுத்துவதுடன் மழைநீர் வீணாகாமல் மண்ணில் சேமிக்க முடியும்.

இதனால் மண்ணில் இறுக்கம் குறைந்து மண்ணில் காற்றோட்டம் அதிகரிப்பதால் நுண்ணுயிரிகளின் வளர்ச்சி அதிகரிக்கிறது. களை மற்றும் கழிவுகள் மக்கி மண்ணுக்கு உரமாகிறது. மண்ணில் உள்ள படைப்புழுவின் கூடுகள் மற்றும் பல்வேறு வகையான பூச்சி இனங்களின் கூட்டுப் புழுக்கள் அழிகின்றன. முன் காலங்களில் பயன்படுத்திய ரசாயன களைக்கொல்லிகளின் வீரியம் வெகுவாக குறைகிறது. களைச் செடியின் விதைகள் அழிக்கப்படுகிறது. சூரிய ஒளி மண்ணுக்குள் ஊடுருவிச் செல்வதால் கழிவுகள் நன்கு மக்கி உரமாகிறது.

ஒரு கூட்டுப்புழுவில் இருந்து வெளிவரும் படைப்புழுவின் தாய் அந்துப் பூச்சியானது 1,500 முதல் 2,000 முட்டைகள் இடுகின்றன. இவை அனைத்தும் புழுக்களாக மாறி மக்காச்சோளப்பயிரினை தாக்குகின்றன. ஆதலால் அனைத்து விவசாயிகளும் கோடை உழவு செய்து படைப்புழுவின் கூட்டுப்புழுவினை அழித்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் அனைத்து விவசாயிகளும் ஒரே நேரத்தில் விதைப்பு செய்ய வேண்டும்.

பல்வேறு நிலைகளில் விதைப்பு செய்தால் வளர்ச்சி நிலையில் உள்ள மக்காச்சோளப் பயிர்களில் படைப்புழு அதிக அளவில் தாக்கும். விதைகள் விதைப்பதற்கு முன்பே எக்டருக்கு 12 எண்கள் வீதம் இனக்கவர்ச்சி பொறிகள் வைப்பதன் மூலம் இயற்கையான முறையில் தாய் அந்துப் பூச்சிகளை கவர்ந்து அழித்துவிடலாம். விதைகளை பேவேரியா பேசியானா 1 கிலோ விதைக்கு 10 கிராம் வீதம் கலந்து விதை நேர்த்தி செய்வதன் மூலம் கட்டுப்படுத்தலாம். மக்காச்சோளம் விதைக்கும் போது அதனுடன் வயல் ஓரங்களில் தட்டைப்பயறு, ஆமணக்கு, சூரியகாந்தி, சாமந்திப்பூ ஆகியவற்றை விதைப்பதன் மூலம் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம். மேற்கண்ட முறைகளை கடைபிடித்து படைப்புழுவின் தாக்குதலை முன் கூட்டியே வராமல் தடுத்து விவசாயிகள் பயன்பெறலாம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.


Next Story