உளுந்தூர்பேட்டை அருகே, மின்சாரம் தாக்கி விவசாயி பலி


உளுந்தூர்பேட்டை அருகே, மின்சாரம் தாக்கி விவசாயி பலி
x
தினத்தந்தி 23 April 2019 11:00 PM GMT (Updated: 23 April 2019 11:00 PM GMT)

உளுந்தூர்பேட்டை அருகே வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செம்மணங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் மாயவன் மகன் சங்கர்(வயது 40), விவசாயி. இவருக்கு திருமணமாகவில்லை. சங்கர் நேற்று அதிகாலை அதேஊரில் உள்ள தனக்கு சொந்தமான வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச செல்வதாக தனது பெற்றோரிடம் கூறிச் சென்றார். பின்னர் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் வயலுக்கு சென்று பார்த்தபோது, சங்கர் மோட்டார் கொட்டகையில் இறந்து கிடந்தார்.

இதைபார்த்த பெற்றோர், உறவினர்கள் சங்கர் உடலை பார்த்து கதறி அழுதனர். இதுபற்றி உறவினர்கள் உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சங்கரின் உடலை பார்வையிட்டனர்.

அப்போது சங்கர் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச மின்மோட்டார் சுவிட்சை இயக்கியபோது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி பலியானது தெரியவந்தது. இதற்கிடையே மின்சாரம் தாக்கி பலியான சங்கரின் உடல் பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story