ஆதரவற்ற நிலையில் விடப்பட்ட 1½ வயது குழந்தை தாத்தாவிடம் ஒப்படைப்பு பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு


ஆதரவற்ற நிலையில் விடப்பட்ட 1½ வயது குழந்தை தாத்தாவிடம் ஒப்படைப்பு பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு
x
தினத்தந்தி 24 April 2019 11:00 PM GMT (Updated: 24 April 2019 6:21 PM GMT)

மன்னார்குடியில் ஆதரவற்ற நிலையில் விடப்பட்ட 1½ வயது ஆண் குழந்தை அவரது தாத்தாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்ய கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

திருவாரூர்,

மன்னார்குடி தேரடி வீதியில் நேற்றுமுன்தினம் 1½ வயது ஆண் குழந்தை ஆதரவற்ற நிலையில் தனியாக நின்று கொண்டிருந்தது. தகவல் அறிந்த மன்னார்குடி டவுன் போலீசார் அந்த குழந்தையை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் குழந்தையின் பெற்றோர் குறித்து விவரம் எதுவும் தெரியவில்லை. இதனையடுத்து போலீசார் 1098 சைல்டு லைன் பணியாளர் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட பின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பாதுகாப்பில் இருந்து வந்தார்.

இந்தநிலையில் மீட்கப்பட்ட குழந்தையின் பெற்றோர் குறித்து விவரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு விசாரணை நடத்தியது. இதில் குழந்தையின் தாத்தா சுரேஷ்குமார் மன்னார்குடி காத்தாயி அம்மன் கோவில் பகுதியில் வசித்து வருவதாக கண்டறியப்பட்டது. பெற்றோர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குழந்தையின் தாய் குழந்தையை கைவிட்டு சென்றுள்ளார். தொடர்ந்து உரிய விசாரணையின் அடிப்படையில் குழந்தையை அவரது தாத்தாவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதனையடுத்து நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அந்த குழந்தையை, அவரது தாத்தாவிடம் ஒப்படைத்தனர்.

மேலும் ஆதரவற்ற நிலையில் விட்டு சென்ற குழந்தையின் பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய கலெக்டர்் ஆனந்த் உத்தரவிட்டார்.

இதுபற்றி அவர் கூறுகையில், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்ப்பதில் பெற்றோர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். பெற்றோர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படும் போது குழந்தைகளை வளர்ப்பது தொடர்பான உதவிக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகினை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என கூறினார்.

அப்போது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை அதிகாரி செல்வராஜ் உடனிருந்தார்.

Next Story