கும்பகோணத்தில் பரிதாபம்: கணவன்-மனைவி தற்கொலை


கும்பகோணத்தில் பரிதாபம்: கணவன்-மனைவி தற்கொலை
x
தினத்தந்தி 24 April 2019 11:00 PM GMT (Updated: 24 April 2019 6:50 PM GMT)

கும்பகோணத்தில், குடும்ப தகராறில் கணவன்-மனைவி தற்கொலை செய்து கொண்டனர்.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் குட்டியான் தெருவை சேர்ந்தவர் பாலமுருகன்(வயது 36). சமையல் காரராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி அருணா(27). இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. நரேஷ்மதன் என்ற 2 வயது ஆண் குழந்தை உள்ளது.

நேற்று இவர்களுடைய வீட்டில் குழந்தை நரேஷ்மதன் வெகுநேரமாக அழுது கொண்டிருந்தான். இதை கவனித்த அக்கம் பக்கத்தினர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது பாலமுருகன் வீட்டின் ஜன்னல் கம்பியில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவருக்கு அருகே கட்டிலில் அருணாவும் இறந்து கிடந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம், பக்கத்தினர் உடனடியாக கும்பகோணம் கிழக்கு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் அங்கு சென்று பாலமுருகன்-அருணா தம்பதியரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், பாலமுருகன்-அருணா தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி குடும்ப தகராறு நடந்து வந்ததும், அதன் காரணமாக பாலமுருகன் தூக்குப்போட்டும், அருணா விஷம் குடித்தும் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன நிலையில் ஒரே அறையில் கணவனும், மனைவியும் தற்கொலை செய்து கொண்டதற்கு வேறு ஏதும் காரணங்கள் உள்ளதா? என்பது பற்றியும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

குடும்ப தகராறில் கணவன்-மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்டதால் அவர்களது 2 வயது குழந்தை தாய்-தந்தையை இழந்து தவித்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story