மீன்பிடி தடை காலம்: சேதுபாவாசத்திரத்தில், படகு மராமத்து பணிகள் தீவிரம்


மீன்பிடி தடை காலம்: சேதுபாவாசத்திரத்தில், படகு மராமத்து பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 24 April 2019 10:45 PM GMT (Updated: 24 April 2019 7:33 PM GMT)

மீன்பிடி தடை காலத்தையொட்டி சேதுபாவாசத்திரத்தில், படகு மராமத்து பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

சேதுபாவாசத்திரம்,

மீன்களின் இனப்பெருக்க காலத்தையொட்டி ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் ஜூன் மாதம் 15-ந் தேதி வரை 60 நாட்கள் விசைப்படகுகள் கடலுக்கு செல்ல மத்திய, மாநில அரசுகள் தடை விதித்து வருகின்றன. வழக்கம்போல் இந்த ஆண்டும் மீன்பிடி தடை காலம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் கஜா புயலின் பாதிப்பால் மீன்பிடி தொழில் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக முடங்கி உள்ளது.

புயலுக்கு முன்பாக தஞ்சை மாவட்டம் சேதுபாவா சத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம் ஆகிய பகுதிகளில் இருந்து 246 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்று வந்தனர்.

புயலில் 188 விசைப்படகுகள் சுக்கு நூறாக நொறுங்கின. 88 படகுகள் மீண்டும் கடலுக்கு எடுத்து செல்ல முடியாதபடி சேதம் அடைந்தன. புயல் தாக்கி 5 மாதங்களுக்கு மேலாகியும் விசைப்படகுகளை இழந்த மீனவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை. வழங்கப்பட்ட நிவாரணத்தொகையும் மிகவும் குறைவாக இருப்பதாக மீனவர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

புயலுக்கு பின்னர் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான விசைப்படகுகளே மீன்பிடி தொழிலுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தன. தற்போது தடை காலம் அமலில் உள்ள நிலையில் சேதுபாவாசத்திரத்தில் விசைப்படகு மராமத்து பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில் படகுகளுக்கு வர்ணம் பூசுதல், சிறுசிறு பழுதுகளை சரிசெய்தல், வலைகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளில் மீனவர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

இதுகுறித்து மீனவர்கள் கூறியதாவது:-

மீன்களின் இனப்பெருக்க காலத்தையொட்டி மீன்பிடி தடை காலம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. மீன்பிடி தொழில் தொடர்ந்து நடைபெறும்போது படகுகளை பராமரிக்கும் வேலைகளை செய்வது கடினம். எனவே இந்த தடை காலத்தை பயனுள்ளதாக்கும் வகையில் படகு மராமத்து பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.

இவ்வாறு மீனவர்கள் கூறினர். 

Next Story