சேமங்கி மாரியம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்பு


சேமங்கி மாரியம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 24 April 2019 10:30 PM GMT (Updated: 24 April 2019 8:53 PM GMT)

சேமங்கி மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நொய்யல்,

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே சேமங்கியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தேர்திருவிழா கடந்த 10-ந்தேதி பூவோட்டிற்கு தர்மகர்த்தா வெற்றிலை பாக்கு கொடுத்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து கடந்த 15-ந்தேதி பூவோடு வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. கடந்த 19-ந்தேதி மாரியம்மன், செல்லாண்டியம்மன் ஆற்றிற்கு செல்லும் நிகழ்ச்சியும், இரவு ஆயக்கால் போடுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

தொடர்ந்து நேற்று முன்தினம் அதிகாலை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருள செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலையில் சுற்று வட்டாரப்பகுதி பெண்கள் பொங்கல் வைத்து சிறப்பு பூஜை செய்தனர். இரவு மாவிளக்கு பூஜை, சாத பூஜை மற்றும் கம்பத்தான் பூஜை நடைபெற்றது. வடகாணிக்கை மற்றும் பூர்விக தானம் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து இரவு திரளான பக்தர்கள் தேரை டிராக்டரில் வைத்து கொண்டு சென்றனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. அப்போது ஒவ்வொரு வீதியிலும், கூடி நின்ற பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.

திரளான பக்தர்கள்

தொடர்ந்து நேற்று முப்பாடு, பண்டாரம் காப்பு அவிழ்ப்பு நிகழ்ச்சியும், கம்பம், கும்பம் காவிரி ஆற்றுக்கு சென்று நீராடி வருதல் நிகழ்ச்சியும், தர்மகர்த்தாவை வீட்டிற்கு அழைத்து செல்லுதல் நிகழ்ச்சியும், அம்மன் ஊஞ்சல் ஆட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர். 

Next Story