நெற்குன்றத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை காதல் தோல்வியா? போலீஸ் விசாரணை


நெற்குன்றத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை காதல் தோல்வியா? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 25 April 2019 10:15 PM GMT (Updated: 25 April 2019 5:52 PM GMT)

நெற்குன்றத்தில், வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் காதல் தோல்வியால் தற்கொலை செய்தாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பூந்தமல்லி,

சென்னை நெற்குன்றம், தேவி கருமாரியம்மன் நகரில் வசித்து வந்தவர் சபரிநாதன்(வயது 26). அதே பகுதியில் உள்ள பர்னிச்சர் கடையில் வேலை செய்து வந்தார். இவரது சொந்த ஊர் கடலூராகும். அவருடைய நண்பர்கள் 2 பேரும் அதே வீட்டில் உடன் தங்கி இருந்தனர்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஓட்டு போடுவதற்காக 3 பேரும் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர். சபரிநாதன் மட்டும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னை திரும்பினார்.

நேற்று முன்தினம் இரவு வரை அவரது வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், இதுபற்றி கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்துசென்ற போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு சபரிநாதன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குடும்பத் தகராறு காரணமா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

Next Story