தஞ்சையில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் மது விற்பனை நேரத்தை இரவு 8 மணியாக குறைக்க கோரிக்கை


தஞ்சையில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் மது விற்பனை நேரத்தை இரவு 8 மணியாக குறைக்க கோரிக்கை
x
தினத்தந்தி 25 April 2019 11:00 PM GMT (Updated: 25 April 2019 7:29 PM GMT)

மது விற்பனை நேரத்தை இரவு 8 மணியாக குறைக்க கோரி தஞ்சையில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்க சி.ஐ.டி.யூ. சார்பில் நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வீரையன், மாவட்ட பொருளாளர் மதியழகன், மாநிலக்குழு உறுப்பினர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ஜெயபால் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், டாஸ்மாக் நிர்வாகம் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இளநிலை உதவியாளர் தேர்வை காலதாமதமின்றி உடனடியாக நடத்துவதற்கான பணிகளை துரிதப்படுத்த வேண்டும். விண்ணப்பதாரர்களின் விவரங்களை டாஸ்மாக் இணையதளத்தில் வெளியிட வேண்டும்.

அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். மது விற்பனை நேரத்தை இரவு 10 மணி என்பதை இரவு 8 மணியாக குறைக்க வேண்டும். கடைகளில் விற்பனையாகும் தொகையை நேரடியாக வங்கிகள் மூலம் வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டாஸ்மாக் ஊழியர்கள் மீது நடத்தப்படும் தொடர் கொலைவெறி தாக்குதலை தடுத்து நிறுத்தி, ஊழியர் களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். கடைகளின் சராசரி விற்பனை விவரம், தேவைப்படும் ஊழியர்கள் எண்ணிக்கை, பணியமர்த்தப்படும் ஊழியர்களது விவரங்களை மாவட்ட அலுவலக தகவல் பலகையில் ஒட்ட வேண்டும்.

ஒவ்வொரு ஊழியரது பணி காலத்தை ஆவணப்படுத்தும் வகையில் பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும். டாஸ்மாக் நிர்வாகம் பொது பணியிட மாறுதல் அறிவிப்பை அமல்படுத்த வேண்டும். மாநிலம் முழுவதும் உள்ள கடைகள் விற்பனை அடிப்படையில் ஊழியர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்க வேண்டும். பணியிடமாறுதலுக்கு ஊழியர்களின் பணி மூப்பு அடிப்படையாக எடுத்து கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் முறைசாரா அணி மாவட்ட செயலாளர் பேர்நீதி ஆழ்வார், சி.ஐ.டி.யூ. மாவட்ட துணைச் செயலாளர் அன்பு, தரைக்கடை சங்க மாவட்ட செயலாளர் மில்லர்பிரபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story