சாதாரண மனிதர்கள் நீதிமன்றத்தை கோவிலாக பார்க்கிறார்கள் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பேச்சு


சாதாரண மனிதர்கள் நீதிமன்றத்தை கோவிலாக பார்க்கிறார்கள் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பேச்சு
x
தினத்தந்தி 25 April 2019 10:45 PM GMT (Updated: 25 April 2019 9:13 PM GMT)

சாதாரண மனிதர்கள் நீதிமன்றத்தை கோவிலாக பார்க்கிறார்கள் என்று சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி விஜயா கே.தகில் ரமணி தெரிவித்தார்.

தக்கலை,

தக்கலையில் பத்மநாபபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் மற்றும் அமர்வு நீதிமன்றம் புதிதாக தொடங்கப்பட்டது. இதற்கான தொடக்க விழா நேற்று நீதிமன்ற வளாகத்தில் நடந்தது. சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி விஜயா கே.தகில் ரமணி கலந்து கொண்டு நீதிமன்றத்தை தொடங்கி வைத்தார்.

மேலும் நீதிமன்றத்தில் 40 வருடங்களுக்கு மேலாக பணிபுரியும் வக்கீல்களை பாராட்டி நினைவு பரிசு வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கோவிலாக பார்க்கிறார்கள்

குமரி மாவட்டத்தில் 16 நீதிமன்றங்கள் உள்ளன. நீதியை நிலை நாட்ட நீதிபதிகளும், வக்கீல்களும் இணைந்து செயல்பட வேண்டும். சாதாரண மனிதர்களின் நம்பிக்கை நீதிமன்றம் தான். அதனை அவர்கள் கோவிலாக பார்க்கிறார்கள். சாதி, மதம் கடந்து அனைவரும் நீதியை நிலைநாட்ட வேண்டும்.

கடந்த காலங்களில் நீதிமன்றங்கள் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது. தற்போது சொந்த கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

நீதிபதிகள்-வக்கீல்கள்

இந்த நிகழ்ச்சியில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கல்யாண சுந்தரம், மாவட்ட நீதிபதி கருப்பையா, பத்மநாபபுரம் சார்பு நீதிபதி அருணாச்சலம், குற்றவியல் நீதிபதிகள் முத்துராமன், பாபு, உரிமையியல் நீதிபதி வேலுசாமி, கலெக்டர் பிரசாந்த் வடநேரே, போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், எம்.எல்.ஏ.க்கள் மனோ தங்கராஜ், ராஜேஷ்குமார், பத்மநாபபுரம் வக்கீல் சங்க தலைவர் தினேஷ், மத்திய அரசு வக்கீல்கள் விக்டோரியா கவுரி, வேலுதாஸ், அரசு வக்கீல் ராபர்ட்சிங் மற்றும் ராஜசேகர், ஏசுராஜா, ஜான் இக்னேஷியஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நீதிபதி பாண்டியராஜ் நன்றி கூறினார்.

Next Story