திருச்சி பொன்மலை பணிமனையில் புதுப்பொலிவு பெற்ற ஊட்டி மலை ரெயில் என்ஜின் டிரெய்லர் லாரியில் அனுப்பி வைப்பு


திருச்சி பொன்மலை பணிமனையில் புதுப்பொலிவு பெற்ற ஊட்டி மலை ரெயில் என்ஜின் டிரெய்லர் லாரியில் அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 27 April 2019 11:00 PM GMT (Updated: 27 April 2019 6:46 PM GMT)

ஊட்டி மலை ரெயில் என்ஜின் திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையில் பராமரிப்பு பணி செய்யப்பட்டது. இந்த பணி முடிவடைந்ததை தொடர்ந்து புதுப்பொலிவுடன் அந்த ரெயில் என்ஜின் டிரெய்லர் லாரியில் ஏற்றி அனுப்பிவைக்கப்பட்டது.

திருச்சி,

நீலகிரி மலைப்பகுதியில் ஊட்டி-மேட்டுப்பாளையம் இடையே மலை ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் சுற்றுலா பயணிகள் மத்தியில் அதிக வரவேற்பைபெற்றது. இந்த ஊட்டி மலை ரெயிலுக்கான என்ஜின்கள் திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையில் ஏற்கனவே தயாரித்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

தொடக்க காலத்தில் நிலக்கரி மூலம் இயக்கப்பட்ட என்ஜின் மாற்றப்பட்டு சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாத வகையில் பர்னஸ் ஆயில் மூலம் நீராவி என்ஜினாக இயக்கப்படுகிறது. இந்த என்ஜின்கள் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒரு முறை பராமரிப்பு பணிக்காக திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனைக்கு கொண்டு வரப்படும். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு என்ஜின் பொன்மலை பணிமனைக்கு வந்தது.

பணிமனையில் ரெயில் என்ஜின் பாகங்கள் முற்றிலும் கழற்றப்பட்டு அதில் இருந்த பழுதுகள் மற்றும் குறைபாடுகளை ஊழியர்கள் சரி செய்தனர். மேலும் உதிரிபாகங்கள் முழுவதையும் பராமரிப்பு பணி மேற்கொண்டனர். என்ஜினுக்கு வர்ணம் தீட்டி புதுப்பொலிவு பெற்றுள்ளது. பராமரிப்பு பணிகள் முழுவதும் சில நாட்களுக்கு முன் நிறைவடைந்த நிலையில் என்ஜினை ஊட்டிக்கு அனுப்பி வைக்க ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

இதைத்தொடர்ந்து டிரெய்லர் லாரியில் என்ஜினை ராட்சத கிரேன் மூலம் நேற்று தூக்கி வைத்தனர். மேலும் என்ஜினுடன் லாரி ஊட்டிக்கு புறப்பட்டு சென்றது.

ஊட்டி மலை ரெயிலுக்காக புதிய தோற்றத்தில் பெட்டிகள் சமீபத்தில் தயாரித்து அனுப்பி வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story