மாட்டுவண்டிகள் மீது லாரி மோதி 2 காளைகள் செத்தன இழப்பீடு கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்


மாட்டுவண்டிகள் மீது லாரி மோதி 2 காளைகள் செத்தன இழப்பீடு கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 27 April 2019 11:00 PM GMT (Updated: 27 April 2019 7:35 PM GMT)

மாட்டு வண்டிகள் மீது லாரி மோதியதில் 2 காளைகள் செத்தன. இழப்பீடு வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

செந்துறை,

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள உஞ்சினி கிராமத்தில் தனியார் சிமெண்டு ஆலையின் சுண்ணாம்புக்கல் சுரங்கம் இயங்கி வருகிறது. இங்கு ஒப்பந்த அடிப்படையில் தனியார் லாரி நிர்வாகம் சுண்ணாம்பு கற்களை வெட்டி எடுத்து லாரிகள் மூலம் செந்துறை, அரியலூர் வழியாக கீழப்பழூர் கொண்டு செல்கிறது. இந்த நிலையில் குழுமூர் கிராமத்தை சேர்ந்த விவசாயிகளான முத்துசாமி, பிச்சைபிள்ளை ஆகியோர் கட்டையன்குடிக்காட்டில் இருந்து குழுமூர் நோக்கி தங்களது 2 மாட்டுவண்டிகளை நேற்று முன்தினம் இரவு ஓட்டிக்கொண்டு வந்தனர். அவர்கள் செந்துறை பெரிய ஏரி பகுதியில் வந்து கொண்டிருந்தபோது பின்னால் அதிவேகமாக வந்த சிமெண்டு ஆலை லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மாட்டு வண்டிகள் மீது மோதியது. இதில் 2 காளைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தன. 2 காளைகள் பலத்த காயமடைந்தன.

இந்த விபத்தில் வண்டியை ஓட்டி வந்த முத்துசாமி, பிச்சைபிள்ளை, திருநாவுக்கரசு ஆகியோர் பலத்த காயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் காயமடைந்தவர்களை தனது பாதுகாப்பு வாகனத்தில் ஏற்றிச்சென்று அரசு மருத்துவமனையில் சேர்த்தார். இந்த நிலையில் நேற்று காலை அப்பகுதி மக்கள் டயர் மாட்டு வண்டிகளை அரியலூர்- செந்துறை சாலையின் குறுக்கே நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட மக்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையில் சிமெண்டு ஆலையின் லாரிகள் செல்ல தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு இளஞ்செழியன் மற்றும் செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் உடன்பாடு ஏற்படவே அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அரியலூர்- செந்துறை சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கால்நடை மருத்துவர் ஜெயக்குமார் தலைமையிலான மருத்துவக்குழுவினர் வரவழைக்கப்பட்டு உயிரிழந்த காளைகள் சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் காயம் அடைந்த காளைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

Next Story