வீட்டு வேலைக்கு அழைத்து சென்று சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்திய பெண் கைது கள்ளக்காதலனுக்கு வலைவீச்சு


வீட்டு வேலைக்கு அழைத்து சென்று சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்திய பெண் கைது கள்ளக்காதலனுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 27 April 2019 11:45 PM GMT (Updated: 27 April 2019 8:05 PM GMT)

உத்திரமேரூர் அருகே வீட்டு வேலை பார்க்க அழைத்து சென்று, சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்திய பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவரது கள்ளக்காதலனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

உத்திரமேரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த அருந்ததியர் பாளையம் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியின் 16 வயது மகளை, அதே பகுதியை சேர்ந்த வேளாங்கண்ணி (வயது 45), அவரது கள்ளக்காதலன் அற்புதராஜ் ஆகியோர் வீட்டுவேலைக்காக அழைத்து சென்றனர். பின்னர் சிறுமிக்கு மயக்கமருந்து கொடுத்து விபசாரத்தில் ஈடுபடுத்தினர்.

மேலும் சிறுமி விபசாரத்தில் ஈடுபட்டபோது வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி யிடம் புகார் செய்தனர்.

அவரது உத்தரவின்பேரில் பெருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக் டர் ராஜா தாமரைபாண்டியன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராணி, சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வி மற்றும் தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படையினர் வேளாங்கண்ணியையும், அற்புதராஜையும் தேடி வந்தனர்.

இந்தநிலையில் காஞ்சீபுரம் கோனேரிக்குப்பம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருந்த வேளாங்கண்ணியை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் வேளாங்கண்ணியின் கணவர் காணிக்கைராஜ் என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார், அவருக்கு 2 மகன்கள் உள்ளனர். வேளாங்கண்ணி காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்தபோது அற்புதராஜூடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது.

இருவரும் காஞ்சீபுரம் கோனேரிக்குப்பத்தில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பம் நடத்திவந்தனர். மேலும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த சிறுமிகளை வீட்டு வேலைக்கு அனுப்பும் தொழிலும் செய்து வந்தனர். அற்புதராஜ், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நெமிலியை சேர்ந்தவர். இவர் ஏற்கனவே பள்ளி மாணவி ஒருவரை திருமணம் செய்து பிரச்சினைக்கு உள்ளானவர் என்றும் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்டுள்ள வேளாங்கண்ணியிடம் மதுராந்தகம் டி.எஸ்.பி. மகேந்திரன் மற்றும் போலீசார், வேறு சிறுமிகள் யாராவது பாதிக்கப்பட்டு உள்ளனரா?, இவர்களுக்கு பின்னால் யாரெல்லாம் இருக்கிறார்கள்? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவான அற்புதராஜையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story