திருவள்ளூரில் பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் 62 பவுன் நகை கொள்ளை


திருவள்ளூரில் பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் 62 பவுன் நகை கொள்ளை
x
தினத்தந்தி 28 April 2019 10:15 PM GMT (Updated: 28 April 2019 8:40 PM GMT)

திருவள்ளூரில் ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் 62 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் கே.ஜி.பி நகரை சேர்ந்தவர் வர்மா (வயது 61). என்ஜினீயரான இவர் பொதுப்பணித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சவுதாமணி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். தன்னுடைய மனைவியை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் வர்மா வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு சென்றார்.

நேற்று வீட்டுக்கு வந்தவர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன.

பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 62 பவுன் தங்க நகையும், ரூ.3 லட்சமும் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து வர்மா திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி, துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன், இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் போலீசார் விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்களும் கொள்ளை நடந்த வீட்டுக்கு வந்து தடயங்களை சேகரித்தனர்.

இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள் யார்? என்று விசாரித்து வருகின்றனர்.

Next Story