மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் கஞ்சி தொட்டி திறந்து போராட்டம் கலெக்டர் அலுவலகம் அருகே பரபரப்பு


மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் கஞ்சி தொட்டி திறந்து போராட்டம் கலெக்டர் அலுவலகம் அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 29 April 2019 11:00 PM GMT (Updated: 29 April 2019 8:55 PM GMT)

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் கஞ்சி தொட்டி திறந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி,

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுகா மான்பிடிமங்களம் என்ற இடத்தில் செயல்பட்டு வந்த மணல் குவாரி கடந்த பிப்ரவரி மாதம் திடீரென மூடப்பட்டது. இதனால் மாட்டு வண்டி மூலம் மணல் அள்ளி வந்த சுமார் 3 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்தனர். மணல் மாட்டு வண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மூடப்பட்ட மணல் குவாரியை மீண்டும் திறக்க கோரி தொழிலாளர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகள் திருவெறும்பூர் தாலுகா கீழமுல்லைக்குடியில் மணல் குவாரி திறப்பதாக உறுதி அளித்தனர். ஆனால், இடையில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டதால் மணல் குவாரி திறப்பதற்கு எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனை கண்டித்து நேற்று முன்தினம் ஜீயபுரம் பகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மாட்டு வண்டி தொழிலாளர்கள் தங்களது வீடுகள் மற்றும் மாட்டு வண்டிகளில் கருப்புக்கொடி கட்டி ஆதங்கத்தை வெளிப் படுத்தினர்.

மணல் குவாரி திறப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தக்கோரி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 29-ந் தேதி(நேற்று) மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று காலை கலெக்டர் அலுவலகம் அருகில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் குடும்பத்துடன் வந்து குவிந்தனர். அவர்கள் ஒரு சரக்கு ஆட்டோவில் சமையல் செய்த சாதத்தை எடுத்து வந்தனர். அந்த சாதத்தை கஞ்சியாக்கி பட்டினியால் வாடும் மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு கொடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்தனர். இந்த போராட்டத்துக்கு திருச்சி மாவட்ட சி.ஐ.டி.யு. தொழிற்சங்க துணை தலைவர் ராமர் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, மணல் மாட்டு வண்டி தொழிற்சங்க செயலாளர் சேகர் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

அப்போது தாசில்தார்கள் ராஜவேலு (திருச்சி மேற்கு), அண்ணாதுரை (திருவெறும்பூர்) ஆகியோர் போராட்டம் நடத்திய தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். தொழிற்சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளை மட்டும் கலெக்டர் சிவராசுவிடம் அழைத்து சென்றனர். கலெக்டர் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்த பின்னர் கீழ முல்லைக்குடியில் மணல் குவாரி திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

இதனை தொடர்ந்து தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டம் கலெக்டர் அலுவலக பகுதியில் நேற்று பரபரப்பை ஏற் படுத்தியது. 

Next Story