அரவக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வி.வி.செந்தில்நாதன் வெற்றி பெறுவது உறுதி எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு


அரவக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வி.வி.செந்தில்நாதன் வெற்றி பெறுவது உறுதி எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு
x
தினத்தந்தி 30 April 2019 11:00 PM GMT (Updated: 30 April 2019 7:18 PM GMT)

அரவக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வி.வி.செந்தில்நாதன் வெற்றி பெறுவது உறுதி என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

அரவக்குறிச்சி,

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக வி.வி.செந்தில்நாதன் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து அரவக்குறிச்சியில் நேற்று முன்தினம் வி.வி.செந்தில்நாதனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்குகேட்டு, மு.தம்பிதுரை, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி, சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.வி.கருப்பணன் மற்றும் கூட்டணி கட்சியினர் பிரசாரத்தை தொடங்கினர்.

இந்த பிரசாரத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பொதுமக்களிடம் வாக்கு கேட்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஏழை, எளிய மக்களுக்கு அனைத்து நலத்திட்டங்களையும் வழங்கி வருகிறார்கள். அரவக்குறிச்சி தொகுதிக்கு பலதரப்பட்ட பணிகளுக்காக ரூ. 1,550 கோடியும், குடிநீர் பணிக்காக ரூ. 220 கோடியும் நிதி வழங்கியுள்ளார்கள். புஞ்சைபுகளூரை புதிய தாலுகாவாக அறிவித்துள்ளார்கள். அ.தி.மு.க.வை யாராலும் அசைக்க முடியாது. மீண்டும் அ.தி.மு.க. மக்கள் ஆதரவுடன் அமோக வெற்றி பெற்று ஆட்சி தொடரும்.

பள்ளப்பட்டியில் இஸ்லாமியர்கள் ஓட்டு தனக்கே கிடைக்குமென்று தி.மு.க. வினர் நினைக்கின்றனர். பள்ளப்பட்டி உலமா பெருமக்கள் 9 பேர் விபத்தில் இறந்தபோது, அமைச்சராக இருந்த வி.செந்தில்பாலாஜி பார்க்க செல்லவில்லை. மனசாட்சியுடன் இஸ்லாமிய பெருமக்கள் இந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளருக்கு சரியான பாடம் புகட்டுங்கள். இந்ததேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் வி.வி.செந்தில் நாதன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறுவது உறுதி. இதனால் அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார். 

Next Story