நாகையில் டிரைவரிடம் செல்போனை பறித்த 3 பேர் கைது வாகன சோதனையின் போது சிக்கினர்


நாகையில் டிரைவரிடம் செல்போனை பறித்த 3 பேர் கைது வாகன சோதனையின் போது சிக்கினர்
x
தினத்தந்தி 2 May 2019 10:15 PM GMT (Updated: 2 May 2019 7:33 PM GMT)

நாகையில் டிரைவரிடம் செல்போனை பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் வாகன சோதனையின் போது சிக்கினர்.

நாகப்பட்டினம்,

நாகை தேரடி தெருவை சேர்ந்த வர் தமிமுன் அன்சாரி (வயது 35). டிரைவர். இவர் சம்பவத்தன்று நாகை அரசு மருத்துவமனை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் தமிமுன் அன்சாரியை வழிமறித்து அவரிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.

இதில் அதிர்ச்சி அடைந்த தமிமுன் அன்சாரி இதுகுறித்து வெளிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நாகை கிழக்கு கடற்கரை சாலை பாப்பான் சுடுகாடு அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரிடம் விசாரணை நடத்தினர்.

3 பேர் கைது

விசாரணையில் அவர்கள் வெளிப்பாளையம் பப்ளிக் ஆபிஸ் ரோட்டை சேர்ந்த ஜோதிபாண்டி மகன் கார்த்திகேயன் (21), அதே பகுதியை சேர்ந்த செல்வம் மகன் விக்னேஷ் (19), முச்சந்தி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மோகன் மகன் சபரிநாதன் (19) ஆகியோர் என்பதும், இவர்கள் தான் தமிமுன் அன்சாரியிடம் செல்போனை பறித்து சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் வெளிப்பாளையம் போலீசார் கைது செய்தனர்.

Next Story