பா.ஜனதா மாநில துணை தலைவர் எம்.ஆர்.காந்தியை கொல்ல முயன்ற வழக்கு 13-ந் தேதிக்கு ஒத்திவைப்பு


பா.ஜனதா மாநில துணை தலைவர் எம்.ஆர்.காந்தியை கொல்ல முயன்ற வழக்கு 13-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 2 May 2019 10:15 PM GMT (Updated: 2 May 2019 8:45 PM GMT)

பா.ஜனதா மாநில துணை தலைவர் எம்.ஆர்.காந்தியை கொல்ல முயன்ற வழக்கை நாகர்கோவில் கோர்ட்டு வருகிற 13-ந் தேதிக்கு ஒத்தி வைத்தது.

நாகர்கோவில்,

குமரி மாவட்ட பா.ஜனதா கட்சி மூத்த தலைவராகவும், மாநில துணை தலைவராகவும் எம்.ஆர்.காந்தி இருந்து வருகிறார். கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21-ந் தேதி எம்.ஆர்.காந்தி தனது வீட்டில் இருந்து ஆசாரிப்பள்ளம் சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது ஒரு கும்பல் அவரை வழிமறித்து தாக்கி கொல்ல முயன்றது. ஆனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கொலை முயற்சியை கண்டித்து மாவட்டம் முழுவதும் அப்போது பெரும் போராட்டங்கள் நடந்தன.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் திருவிதாங்கோட்டை சேர்ந்த அப்துல் சலீம், இடலாக்குடியைச் சேர்ந்த செய்யது அலி, பிரபு என்ற அம்சா அப்துல் அஜீஸ், மேலப்பாளையத்தை சேர்ந்த முகமது சாபின் மற்றும் இளங்கடையை சேர்ந்த ஷாஜி ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் இவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு நாகர்கோவில் முதன்மை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வருகிறது. வழக்கு விசாரணை தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை நேற்று மீண்டும் கோர்ட்டில் நடந்தது. விசாரணைக்காக குற்றம் சாட்டப்பட்ட 5 பேரில் 4 பேர் மட்டுமே கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். பிரபு என்ற அம்சா அப்துல் அஜீஸ் ஆஜராகவில்லை. இதன் பிறகு வழக்கின் விசாரணையை நீதிபதி பாண்டியன் வருகிற 13-ந் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்றைய தினம் இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story