இலங்கை குண்டுவெடிப்பை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆர்ப்பாட்டம்


இலங்கை குண்டுவெடிப்பை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 May 2019 11:00 PM GMT (Updated: 3 May 2019 7:14 PM GMT)

இலங்கை குண்டு வெடிப்பை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

சென்னை,

இலங்கை குண்டு வெடிப்பை கண்டித்தும், தாக்குதலை நடத்திய ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை கண்டித்தும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (சென்னை மாவட்டம்) சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு தென்சென்னை மாவட்ட தலைவர் ஹபீப் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் அப்துர் ரகுமான், துணை பொதுச்செயலாளர் அப்துர் ரகீம், செயலாளர்கள் அன்சாரி, இப்ராகீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இலங்கை குண்டு வெடிப்பில் காயம் அடைந்தவர்களை சித்தரிக்கும் வகையில் காயம் அடைந்தது போல் வேடமிட்டு குழந்தைகள் சிலர் ஆர்ப்பாட்ட மேடையில் நிறுத்தப்பட்டு இருந்தனர். மேலும், இலங்கை குண்டு வெடிப்புக்கு காரணமான ஐ.எஸ். இயக்கத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டம் குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில துணை பொதுச்செயலாளர் அப்துர் ரகீம் நிருபர் களிடம் கூறியதாவது:-

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது. இந்த குண்டுவெடிப்புக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பு ஏற்று இருக்கிறது. இலங்கையில் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் என்று சொல்லக்கூடிய அமைப்போடு இணைந்து இந்த சம்பவம் நடந்து இருக்கிறது.

எங்களுடைய அமைப்பை இந்த குண்டுவெடிப்போடு தொடர்புபடுத்தி பிரசாரம் செய்யப்படுகிறது. இதுவும் வன்மையாக கண்டிக்கத்தக்க ஒன்று. இலங்கையில் முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி பர்தா அணியக்கூடாது என்று அறிவித்து இருப்பதை ஆதரிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story