திருத்துறைப்பூண்டி அருகே, சப்-இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு - போலீசார் விசாரணை


திருத்துறைப்பூண்டி அருகே, சப்-இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 5 May 2019 10:45 PM GMT (Updated: 5 May 2019 6:59 PM GMT)

திருத்துறைப்பூண்டி அருகே சப்-இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் தகராறில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக வந்த திருத்துறைப்பூண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் இந்த சம்பவம் குறித்து திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் ஏட்டு மதியழகன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து தகராறில் ஈடுபட்ட வாலிபரை பிடித்தனர். உடனே தகராறில் ஈடுபட்ட பிற வாலிபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்ட வாலிபரை மோட்டார்சைக்கிளில் போலீசார் திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று கொண்டிருந் தனர்.

தலைக்காடு கடைத்தெரு அருகே இவர்கள் சென்று கொண்டிருந்த போது ஒரு அரசியல் கட்சி பிரமுகர் தனது ஆதரவாளர்களுடன் அங்கு வந்து போலீசார் பிடியில் இருந்த வாலிபரை அரிவாளால் வெட்ட முயன்றார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தனது பிடியில் இருந்த வாலிபரை காப்பாற்ற முயன்றார். அப்போது அவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

அரிவாள் வெட்டில் படுகாயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவத்தின் போது போலீசார் பிடித்து வைத்திருந்த வாலிபர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்டிய அரசியல் கட்சி பிரமுகர் ஆகியோர் தப்பி ஓடி விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் திருத்துறைப்பூண்டி போலீசார் விசாரணை நடத்தி தப்பி ஓடியவர்களை தேடி வருகிறார்கள்.

Next Story