விடுமுறையில் ஜவுளிக்கடையில் வேலை செய்த 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை ஊழியருக்கு பொதுமக்கள் தர்மஅடி


விடுமுறையில் ஜவுளிக்கடையில் வேலை செய்த 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை ஊழியருக்கு பொதுமக்கள் தர்மஅடி
x
தினத்தந்தி 10 May 2019 11:15 PM GMT (Updated: 10 May 2019 4:49 PM GMT)

விடுமுறையில் ஜவுளிக் கடையில் வேலை செய்த 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஊழியரை பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

பிராட்வே,

சென்னை வண்ணாரப்பேட்டை எம்.சி. ரோட்டில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் 10-ம் வகுப்பு மாணவி ஒருவர், பள்ளி விடுமுறையையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்தார்.

நேற்றுமுன்தினம் மாலை வேலை முடிந்து மாணவி தனது வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது அந்த ஜவுளிக் கடையில் வேலை செய்யும் கொருக்குப்பேட்டையை சேர்ந்த செல்லதுரை(வயது 45) என்ற ஊழியர், மாணவியை ஜவுளிக்கடையில் உள்ள அறைக்கு அழைத்துச்சென்று பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சலிட்டார். உடனே அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள், சிறுமியை மீட்டனர். பின்னர் கடை ஊழியர் செல்லதுரைக்கு தர்மஅடி கொடுத்து வண்ணாரப்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர்.

பொதுமக்கள் தாக்கியதில் அவரது முகத்தில் காயம் ஏற்பட்டது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்லதுரையை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story