அ.தி.மு.க.வை அழிக்கப்பார்க்கிறார்: சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பணன் மீது தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. கடும் குற்றச்சாட்டு, கோஷ்டி பூசல் வெடித்தது


அ.தி.மு.க.வை அழிக்கப்பார்க்கிறார்: சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பணன் மீது தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. கடும் குற்றச்சாட்டு, கோஷ்டி பூசல் வெடித்தது
x
தினத்தந்தி 11 May 2019 11:30 PM GMT (Updated: 11 May 2019 5:43 PM GMT)

அ.தி.மு.க.வை அழிக்கப்பார்க்கிறார் என்று சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பணன் மீது தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. கடும் குற்றச்சாட்டு கூறி உள்ளார். இதன் மூலம் அ.தி.மு.க.வின் கோஷ்டி பூசல் வெளியே வெடித்து உள்ளது.

ஈரோடு,

தமிழக சுற்றுச்சூழல் துறை முன்னாள் அமைச்சராக இருந்தவர் தோப்பு என்.டி. வெங்கடாசலம். ஈரோடு புறநகர் மாவட்டத்தின் மாவட்ட செயலாளராகவும் இருந்தார். தற்போது மாவட்ட செயலாளர் பதவி தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் வசம் உள்ளது.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்துக்கு பின்னர் தோப்பு என்.டி.வெங்கடாசலத்துக்கு மாநில ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

ஈரோடு புறநகர் மாவட்டத்தை பொறுத்தவரை முன்னாள் அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலத்துக் கும், தற்போதைய மாவட்ட செயலாளரும், அமைச்சருமான கே.சி.கருப்பணனுக்கும் பனிப்போர், திரைமறைவு யுத்தம், கோஷ்டி பூசல் நடந்து கொண்டே இருந்தது.

இந்தநிலையில் நீறு பூத்த நெருப்பாக இருந்த கோஷ்டி பூசல் வெடிக்கத்தொடங்கி உள்ளது.

நேற்று பெருந்துறையில் உள்ள வீட்டில் நிருபர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் அமைச்சர் கே.சி.கருப்பணன் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி பேட்டி அளித்தார். பேட்டியின்போது அவர் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலில் திருப்பூர் தொகுதியில் எம்.எஸ்.எம். ஆனந்தன் போட்டியிட்டார். அவர் அ.தி.மு.க. வேட்பாளர். அவருக்கு பெருந்துறை தொகுதி முழுவதும் நானும், அ.தி.மு.க.வின் அனைத்து தொண்டர்களும் தீவிரமாக வேலை செய்தோம்.

ஆனால், இந்த தொகுதியின் மாவட்ட செயலாளரும், மாவட்டத்தின் அமைச்சருமாக இருக்கிற கே.சி.கருப்பணன் அ.தி.மு.க.வுக்கு வாக்கு சேகரிக்கும் வேலையை விட்டு, தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாகவும், அ.ம.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாகவும் அவரது ஆதரவாளர் கள் மூலம் வேலை செய்தார். இது இங்குள்ள அ.தி.மு.க. தொண்டர்கள், கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் அப்பட்டமாக தெரியும். தேர்தலின் போது பெருந்துறை தொகுதியில் அ.தி.மு.க. அதிக வாக்குகள் பெற்றுவிடக்கூடாது. அதன் மூலம் என்மீது களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டார். அவர் மாவட்ட செயலாளராக பொறுப்பு ஏற்றது முதல் கட்சி தொண்டர்களை சந்திப்பது இல்லை. ஆனால், நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வுக்கு எதிராக பணியாற்றியவர்களுக்கு அவருடைய வீட்டில் அழைத்து விருந்து வைத்தார்.

அமைச்சர் பதவியை வைத்து அவர் கட்சிக்கே துரோகம் செய்து வருகிறார். இதுபோன்றவர்களை கட்சிக்குள் வைத்திருக்கலாமா என்று கட்சி தலைமை முடிவு எடுக்க வேண்டும். அவர் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும், கட்சிக்கு எதிராக பணியாற்ற அவரது ஆதரவாளர்களுக்கு கட்டளையிட்டது உள்ளிட்ட எல்லா விவரங்களையும் ஆதாரத்துடன் சேகரித்து முதல்- அமைச்சர் மற்றும் துணை முதல்-அமைச்சருக்கு அனுப்பி உள்ளேன். முதல்- அமைச்சர், துணை முதல்- அமைச்சரின் முடிவுக்காக பெருந்துறை தொகுதி அ.தி.மு.க. தொண்டர்கள் காத்திருக்கிறோம். கட்சியை அழிக்கப்பார்க்கும்போது எங்களால் பொறுமையாக இருக்க முடியவில்லை.

இவ்வாறு தோப்பு என்.டி.வெங்கடாசலம் கூறினார்.

இதுவரை திரைமறையில் இருந்த அ.தி.மு.க. கோஷ்டி சண்டை வெடித்து இருப்பது அ.தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story