ஓய்வு பெறும் நாளுக்கு முதல் நாள் பணியிடை நீக்க முறைக்கு கண்டனம் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் தீர்மானம்


ஓய்வு பெறும் நாளுக்கு முதல் நாள் பணியிடை நீக்க முறைக்கு கண்டனம் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் தீர்மானம்
x
தினத்தந்தி 11 May 2019 10:15 PM GMT (Updated: 11 May 2019 6:42 PM GMT)

ஓய்வு பெறும் நாளுக்கு முதல் நாள் பணியிடை நீக்க நடைமுறைக்கு கண்டனம் தெரிவித்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

காரைக்குடி,

காரைக்குடி கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட உயர்மட்டக்குழு கூட்டம் காரைக்குடியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில செய்தி தொடர்பாளரும், மாவட்ட செயலாளருமான அருள்ராஜ் தலைமை தாங்கி விளக்கவுரையாற்றினார். தலைவர் கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம் வருமாறு:–

மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலகம் இல்லாத கிராமங்களுக்கு புதிய கட்டிடம் கட்டவும், பழுதடைந்த நிலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலகங்களை சீரமைக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மடிக்கணினி மற்றும் இணையதள சேவை போன்ற வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும்.

2017–18 ஆண்டு பயிர் காப்பீடு சம்பந்தமாக சமீபத்தில் தேவகோட்டை, இளையான்குடி, காளையார்கோவில் பகுதியில் பணி ஓய்வு பெறும் நிலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்களை ஓய்வுபெறும் நாளுக்கு ஒரு நாள் முன்னதாக பணியிடை நீக்கம் செய்த நடைமுறையை சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

மேற்படி ஓய்வு பெறும் நிலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் பற்றிய விவரம் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிந்தும், மேற்படி கிராம நிர்வாக அலுவலர்களுக்கு 2 மாதங்களுக்கு முன்பே குற்ற குறிப்புகளை கொடுத்து தக்க நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் செய்திருக்க வேண்டும். இவ்வாறான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story