60 ஏக்கர் விளைநிலம் பயன்பெறும் மாமல்லபுரம் சோழிபொய்கை குளத்தை தூர்வார விவசாயிகள் கோரிக்கை


60 ஏக்கர் விளைநிலம் பயன்பெறும் மாமல்லபுரம் சோழிபொய்கை குளத்தை தூர்வார விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 13 May 2019 3:45 AM IST (Updated: 12 May 2019 11:11 PM IST)
t-max-icont-min-icon

60 ஏக்கர் விளைநிலம் பயன்பெறும் வகையில் மாமல்லபுரம் சோழிபொய்கை குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மாமல்லபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம், வடக்கு மாமல்லபுரம் பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையையொட்டி 60 ஏக்கர் விளைநிலங்கள் உள்ளது. இந்த நிலங்களில் விவசாயிகள் நெற்பயிர்கள், கேழ்வரகு, தர்பூசணி மற்றும் காய்கறிகள் பயிரிட்டு வந்தனர்.

இந்த நிலங்களுக்கு அங்குள்ள சோழி பொய்கைகுளம் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கியது. இதில் இருந்து கிடைக்கும் தண்ணீர் மூலம் விவசாயம் செய்து வந்தனர்.

நாளடைவில் இந்த குளம் தூர்ந்து கோரை புற்கள், செடிகள் வளர்ந்து நீர் ஆதாரம் இன்றி வறண்டு விட்டது. மழைக்காலங்களில் இந்த குளத்தில் நீர் தேங்குவதில்லை. இதனால் பல ஆண்டுகளாக விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர். விவசாயிகள் சார்பில் 5 முறை பொதுப்பணித்துறைக்கு மனு கொடுத்தும், இதுவரை இந்த பொய்கைகுளத்தை தூர்வார எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதற்கிடையே கடந்த ஆண்டு (2018) மார்ச் மாதம் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் குளத்தை நேரில் பார்வையிட்டார். அப்போது வருவாய்த்துறை சார்பில் திட்ட மதிப்பீடு தயார் செய்து குளம் தூர்வாரும் பணி தொடங்கப்படும் என்று கலெக்டர் உறுதி அளித்தார். ஆனால் ஒரு வருடம் கடந்தும் இதற்கான பணி இன்னும் தொடங்கப்படவில்லை.

இதற்கிடையே நீர்நிலை பாதுகாப்பு சங்கத்தினரும், சமூக ஆர்வலர்களும் குளத்தை தாங்களே தூர்வாரி சீரமைத்து கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதற்கும் அரசிடம் இருந்து இதுவரை அனுமதி வழங்கவில்லை.

ஒரு பக்கம் விவசாயமும், மறுபுறம் குடிநீர் ஆதாரமும் இன்றி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். விவசாய சாகுபடி செய்யாததால் இக்குளத்திற்கு அருகில் உள்ள விளைநிலங்கள் தற்போது வறண்ட நிலையில் காணப்படுகிறது. அதில் வளர்ந்துள்ள புற்கள் காய்ந்து ஒன்றோடு ஒன்று உரசி கருகி தீப்பிடித்து எரிந்து நாசமாகிறது. மேலும் ஆடு, மாடு மேய்ச்சல் நிலமாக விளைநிலங்கள் காணப்படுகிறது.

இந்த குளத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்திலேயே முதன்முதலாக கூட்டுறவு பாசன முறையில் பம்பு செட் அமைத்து மோட்டார் மூலம் விளைநிலங்களுக்கு தண்ணீர் வினியோகிக்கப்பட்டது. வடக்கு மாமல்லபுரம் மக்களின் குடிநீர் தேவையை போக்கும் நீர் ஆதாரமாகவும் இக்குளம் விளங்கியது. தற்போது இக்குளத்தில் மண் சரிவு ஏற்பட்டு கோரை புற்கள் முளைத்து தூர்ந்து பாழாகி விட்டது. புதர்கள் மண்டி கிடப்பதால் பாம்புகளின் புகலிடமாகவும் உள்ளது.

எனவே 6 ஏக்கர் பரப்பளவு உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த குளத்தை தூர்வாரி மீண்டும் விவசாயிகளின் வாழ்வாதாரம் செழிக்கவும், வேளாண் சாகுபடி செய்யவும், தமிழக அரசு தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story