மனைவி கண் எதிரே ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை மகளின் திருமண வரவேற்புக்கு சென்றபோது மர்ம கும்பல் தீர்த்து கட்டியது


மனைவி கண் எதிரே ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை மகளின் திருமண வரவேற்புக்கு சென்றபோது மர்ம கும்பல் தீர்த்து கட்டியது
x
தினத்தந்தி 12 May 2019 10:15 PM GMT (Updated: 12 May 2019 7:45 PM GMT)

அயனாவரத்தில், மனைவி கண் எதிரே ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மகளின் திருமண வரவேற்புக்கு செல்ல முயன்றபோது மர்ம கும்பல் வழிமறித்து தீர்த்து கட்டியது.

திரு.வி.க.நகர்,

சென்னை அயனாவரம் திக்காகுளம் பகுதியை சேர்ந்தவர் ஜெபசீலன் (வயது 48). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி பிரிஸ்டில்லா. இவர்களுக்கு ஷீபாராணி என்ற மகளும், 17 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

ஷீபாராணிக்கு கடந்த 10-ந் தேதி திருப்பதியில் திருமணம் நடைபெற்றது. நேற்று மாலை இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மீஞ்சூரில் நடைபெற்றது. இதற்காக அயனாவரத்தில் உள்ள தனது உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களை மகள் திருமண வரவேற்பில் கலந்துகொள்வதற்காக தனியாக பஸ் வசதி ஏற்பாடு செய்து மீஞ்சூருக்கு அனுப்பிவைத்தார்.

பின்னர் கடைசியாக ஜெபசீலன் மனையுடன் நண்பரின் மோட்டார் சைக்கிளை வாங்கிக்கொண்டு வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். வீட்டில் இருந்து சிறிது தூரம் சென்றபோது, எதிரே வந்த 5 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்தது.

அந்த கும்பல் தாங்கள் மறைத்து வைத்து இருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் ஜெபசீலனை சரமாரியாக வெட்டியது. இதில் படுகாயம் அடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் மனைவி கண் எதிரேயே பரிதாபமாக இறந்தார்.

இதை தடுக்க முயன்ற அவரது மனைவி பிரிஸ்டில்லாவுக்கும் கையில் வெட்டு விழுந்தது. பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் கீழ்ப்பாக்கம் போலீஸ் துணை கமிஷனர் ராஜேந்திரன், உதவி கமிஷனர் பாலமுருகன் மற்றும் அயனாவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். பின்னர் கொலையான ஜெபசீலன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுபற்றி அயனாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

கடந்த மாதம் அதே பகுதியை சேர்ந்த வினோத் என்பவருக்கு 17 வயது சிறுமியுடன் நடைபெற இருந்த திருமணத்தை ஜெபசீலன் உள்ளிட்ட அந்த பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் தடுத்து நிறுத்தியதாக தெரிகிறது. இதனால் வினோத், தனது நண்பர்களுடன் சேர்ந்து ஜெபசீலனை கொலை செய்தது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையில் ஜெபசீலன் கொலையான தகவல் அறிந்ததும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றிருந்த அவரது உறவினர்கள் சம்பவ இடத்துக்கு திரண்டு வந்தனர். ஆத்திரம் அடைந்த அவர்கள், வினோத் வீட்டின் முன்பு திரண்டதால் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.

இதையடுத்து அந்த பகுதியில் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story