காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை கத்தியால் குத்திக்கொலை மாமனார்-மனைவி கைது


காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை கத்தியால் குத்திக்கொலை மாமனார்-மனைவி கைது
x
தினத்தந்தி 14 May 2019 4:45 AM IST (Updated: 14 May 2019 1:44 AM IST)
t-max-icont-min-icon

திருக்கடையூர் அருகே காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவருடைய மாமனாரையும், மனைவியையும் கைது செய்தனர்.

திருக்கடையூர்,

நாகை மாவட்டம் திருக்கடையூர் அருகே உள்ள தலைச்சங்காடு மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜாராமன். இவருடைய மகன் சதீஷ்குமார்(வயது 30). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர், மாமாகுடி ஊராட்சி அப்புராஜபுரம்புத்தூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த நாகராஜன் மகள் கலைமதி(25) என்பவரை காதலித்து வந்தார். இவர்களுடைய திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு நடந்தது.

இந்த நிலையில் சதீஷ் குமார்-கலைமதி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கலைமதி கணவருடன் கோபித்துக்கொண்டு அப்புராஜபுரம்புத்தூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் சதீஷ்குமார் தனது மாமனார் வீட்டுக்கு அருகே உள்ள தனது தாய்மாமன் பன்னீர்செல்வம் என்பவருடைய வீட்டுக்கு சென்றார். அப்போது சதீஷ்குமாரை பார்த்த கலைமதி தகாத வார்த்தைகளால் அவரை திட்டியதாகவும், இதனால் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாகவும் தெரிகிறது.

இதை பார்த்து ஆத்திரம் அடைந்த கலைமதியின் தந்தை நாகராஜன் அங்கு வந்து தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் சதீஷ்குமாரை குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த சதீஷ்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆக்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.

பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக அங்கிருந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி சதீஷ்குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சதீஷ்குமாரின் தாய்மாமன் பன்னீர்செல்வம், பொறையாறு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரின் மாமனார் நாகராஜன்(58), சதீஷ் குமாரின் மனைவி கலைமதி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

திருமணமாகி 5 மாதங்களே ஆன நிலையில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
1 More update

Next Story