குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி அவினாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை


குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி அவினாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 13 May 2019 11:09 PM GMT (Updated: 13 May 2019 11:09 PM GMT)

குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி அவினாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அவினாசி,

அவினாசி ஒன்றியம் முருகம்பாளையத்தை சேர்ந்த கிராம மக்கள் தங்கள் பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறி இருப்பதாவது:-

அவினாசி ஒன்றியம் உப்பிலிபாளையம் ஊராட்சி முருகம்பாளையத்தில் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றோம். இங்கு கடந்த ஒரு மாதமாக குடிநீர் வினியோகம் இல்லை. இதனால் தினமும் குடிநீருக்காக பல்வேறு இடங்களில் சுற்றி திரியும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் முறையீட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் சாக்கடை கால்வாய்கள் சரிவர சுத்தம் செய்யாமல் இருப்பதால் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியுள்ளது. நகரில் ஆங்காங்கே தெருவிளக்குகளும் எரிவதில்லை. குடிநீர் பிரச்சினை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை உடனே செய்து தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்த மனுவை பெற்று கொண்ட ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஹரிகரன் பிரச்சினைகளை தீர்க்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். அதன்பிறகு அவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story