குறுவை சாகுபடிக்கு ஜூன் 12–ந்தேதி தண்ணீர் திறக்க காவிரி கண்காணிப்புக்குழு கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும்


குறுவை சாகுபடிக்கு ஜூன் 12–ந்தேதி தண்ணீர் திறக்க காவிரி கண்காணிப்புக்குழு கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும்
x
தினத்தந்தி 14 May 2019 10:45 PM GMT (Updated: 14 May 2019 3:46 PM GMT)

குறுவை சாகுபடிக்கு ஜூன் 12–ந்தேதி தண்ணீர் திறக்க காவிரி கண்காணிப்புகுழு கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என்று பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

தஞ்சாவூர்,

தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் புண்ணியமூர்த்தி தலைமை தாங்கினார். தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் அண்ணாதுரை, பாஸ்கர், ரமேஷ்குமார், கலியமூர்த்தி, அறிவு, வீரப்பன், விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

கர்நாடக அணைகளில் தண்ணீர் இருப்பதாக அம்மாநில முதல்–மந்திரி தேர்தல் பிரசார கூட்டங்களில் பேசி உள்ளார். நான் நேரடியாக அங்கு சென்று பார்த்தபோதும் கூட அனைத்து ஏரிகளிலும் தண்ணீர் நிரம்பி வழிகிறது. எனவே அணைகளில் இருக்கிற தண்ணீரை ஏரிகளில் நிரப்பி வைத்துவிட்டு, அணைகளில் தண்ணீர் இருந்தால் தானே தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியும் என அணைகளை காலி செய்து வைத்துள்ளார்.


அங்குள்ள அணைகளின் தண்ணீர் இருப்பை காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகாவுக்கும், தமிழகத்துக்கும், கேரளாவுக்கும் தெளிவுபடுத்த வேண்டும். ஆணையம் கூடி தமிழகத்துக்கு அடுத்த கட்டமாக தண்ணீர் பெற்றுத்தர நடவடிக்கை ஏற்படுத்த வேண்டும். இந்த ஆண்டாவது குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறப்பது குறித்து தமிழக அரசு விவசாயிகளுக்கு உத்திரவாதம் தர வேண்டும்.

எனவே வருகிற ஜூன் 12–ந்தேதி காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்க உடனடியாக காவிரி கண்காணிப்பு குழுவை கூட்ட வேண்டும். காவிரி டெல்டாவில் அழிவை ஏற்படுத்தக்கூடிய ஹைட்ரோகார்பன் எரிவாயு திட்டத்துக்கு அனுமதியை கொடுத்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தேர்தல் நேரத்தில் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் போது, இந்த திட்டத்தை அமல்படுத்துவது காவிரி டெல்டாவை அழிக்கும் உள்நோக்கம் கொண்ட செயலாகும். உடனடியாக அந்த திட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசு முன் வர வேண்டும்.


இதுகுறித்து தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும். இனியும் தமிழக முதல்–அமைச்சர் மவுனம் சாதிப்பது ஏற்புடையதல்ல. இதுதொடர்பாக தமிழக முதல்–அமைச்சர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி தனது நிலைப்பாட்டை தமிழக விவசாயிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story