இந்தியாவில் செயல்படாத விடுதலைப்புலிகள் மீதான தடை நீட்டிப்பு முறையல்ல பழ.நெடுமாறன் பேட்டி


இந்தியாவில் செயல்படாத விடுதலைப்புலிகள் மீதான தடை நீட்டிப்பு முறையல்ல பழ.நெடுமாறன் பேட்டி
x
தினத்தந்தி 14 May 2019 11:00 PM GMT (Updated: 14 May 2019 6:54 PM GMT)

இந்தியாவில் செயல்படாத விடுதலைப்புலிகள் மீதான தடை நீட்டிப்பு முறையல்ல என்று பழ.நெடுமாறன் கூறினார்.

கன்னியாகுமரி,

குமரி மாவட்டத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளது. குமரி மாவட்டத்தில் மட்டும் சுமார் 45 ஆயிரம் வாக்காளர்களுக்கு, அவர்களின் உரிமை மறுக்கப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன். தேர்தல் ஆணையம் இனியாவது முறையாக செயல்பட வேண்டும்.

இந்தியாவில் செயல்படாத விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டு இருப்பதை ஏற்க முடியாது. இலங்கையில் போர் முடிந்து விடுதலைப்புலிகள் இயக்கம் ஒழிக்கப்பட்டு விட்டதாக அந்த நாட்டு அரசே அறிவித்த பின்பு இந்தியாவில் இந்த தடை நீட்டிக்கப்பட்டிருப்பது முறையல்ல. ஐரோப்பிய நாடுகளிலும், வேறு சில நாடுகளிலும் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டு விட்டது.

இந்தியாவில் காங்கிரஸ் அரசு கொண்டு வந்த இந்த தடை நீட்டிப்பை பாரதீய ஜனதா அரசும் பின்பற்றுவது அப்பட்டமான ஜனநாயக விரோத செயலாகும். இது ஈழ தமிழர்களுக்கு எதிரான போக்காகும். விடுதலைப்புலிகள் அமைப்பு இந்தியா உள்பட எந்த நாட்டிலும் தங்களுக்கு தனிநாடு வேண்டும் என்று கேட்கவில்லை. இங்குள்ள சிறுபகுதிகளை கூட அவர்கள் கேட்கவில்லை. தமிழ்நாட்டு மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்லும் போது இலங்கை கடற்படையால் வேட்டையாடப்படுகிறார்கள். அவர்களை பாதுகாக்க வேண்டிய இந்திய கடற்படை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்வதற்கான தடை நீங்கிவிட்டது. எனவே மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து 7 பேரையும் விடுவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story