பேரளம் அருகே சிறுவனுக்கு அரிவாள் வெட்டு தொழிலாளிக்கு வலைவீச்சு


பேரளம் அருகே சிறுவனுக்கு அரிவாள் வெட்டு தொழிலாளிக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 15 May 2019 3:45 AM IST (Updated: 15 May 2019 12:44 AM IST)
t-max-icont-min-icon

பேரளம் அருகே சிறுவனுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக தொழிலாளி ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

நன்னிலம்,

திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள ஏனங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது38). விவசாய தொழிலாளி. இவருடைய மகன் விஷ்ணுகுமார் (13), அங்கு உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான். அதே பகுதியை சேர்ந்தவர் திவாகர் (30). தொழிலாளி.

இவருக்கும், ராஜ்குமாருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று ராஜ்குமாரின் மகன் விஷ்ணுகுமார் அப்பகுதியில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த திவாகர் அரிவாளால் விஷ்ணுகுமாரை தலையில் வெட்டினார்.

மருத்துவமனையில் சிகிச்சை

இதில் படுகாயம் அடைந்த விஷ்ணுகுமாரை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ராஜ்குமார் பேரளம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக திவாகரின் மனைவி மங்கையர்கரசியை கைது செய்துள்ள போலீசார், திவாகரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story