உள்ளாட்சி தேர்தலுக்கு ஆயத்தம்: திருச்சி மாநகராட்சியில் 765 வாக்குச்சாவடிகள் இறுதி பட்டியல் வெளியீடு


உள்ளாட்சி தேர்தலுக்கு ஆயத்தம்: திருச்சி மாநகராட்சியில் 765 வாக்குச்சாவடிகள் இறுதி பட்டியல் வெளியீடு
x
தினத்தந்தி 14 May 2019 11:00 PM GMT (Updated: 14 May 2019 9:09 PM GMT)

உள்ளாட்சி தேர்தலுக்கு ஆயத்தமாக திருச்சி மாநகராட்சியில் 765 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக இறுதி பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி,

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிப்பது, வாக்குச்சாவடிகள் அமைப்பது உள்ளிட்டவை குறித்த வழிமுறைகள் பற்றி அரசின் அரசாணை அரசிதழில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த அரசாணையை, மாநில தேர்தல் ஆணையத்திடமும் தமிழக அரசு சமர்ப்பித்துள்ளது. அதில், மாவட்டம், ஊராட்சி ஒன்றியம், கிராம ஊராட்சி, மாவட்ட ஊராட்சி வாரியாக வாக்காளர் பட்டியல் தயாரிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல வாக்குச்சாவடிகள் அமைக்கும்போது, வாக்குச்சாவடி எண், வாக்குச்சாவடி பெயர், வாக்குச்சாவடி வகை ஆகியவற்றை உள்ளடக்கியிருப்பதை கருத்தில் கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் 2011-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பதவிக்காலம் 2016-ம் ஆண்டு அக்டோபர் 24-ந் தேதியுடன் முடிந்தது. அன்று முதல் கடந்த 3 ஆண்டுகளாக தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளாட்சி அமைப்புகள் இயங்கி வருகின்றன.

உள்ளாட்சி தேர்தலுக்கான தொகுதி சீரமைப்பு பணிகளை தொடர்ந்து, வாக்காளர் பட்டியல் சரிசெய்யும் பணியை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டிருந்தது. சமீபத்தில், சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பான வழக்கில் பதிலளித்த மாநில தேர்தல் ஆணையம் 3 மாத அவகாசம் கேட்டது குறிப் பிடத் தக்கது. தற்போது நாடாளுமன்றம் மற்றும் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிந்த பிறகு தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

765 வாக்குச்சாவடிகள்

இந்த நிலையில் திருச்சி மாநகராட்சியில் மொத்தம் உள்ள 65 வார்டுகளுக்கும் வாக்குச்சாவடி இறுதி பட்டியலை ஆணையர் ரவிச்சந்திரன் நேற்று வெளியிட்டார். திருச்சி மாநகராட்சி உள்ளாட்சி தேர்தல் 2019-க்கான மறுவரையறை செய்யப்பட்ட வார்டுகளுக்கான இறுதி வாக்குச்சாவடி பட்டியல் மாநகராட்சி மைய அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்ரீரங்கம், அரியமங்கலம், பொன்மலை மற்றும் கோ-அபிஷேகபுரம் கோட்ட அலுவலகங்களில் உதவி ஆணையர்கள் மூலம் பொது மக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆணையர் ரவிச்சந்திரன் கூறுகையில், “திருச்சி மாநகராட்சியின் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சாவடிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. அதன்படி, வார்டு எண் 1 முதல் 65 வரை மறுவரையறை செய்யப்பட்ட வார்டுகளில் மொத்தம் 765 வாக்குச்சாவடிகள் உள்ளன. மொத்த வாக்காளர்கள் 7 லட்சத்து 37 ஆயிரத்து 517. அவர்களில் ஆண் வாக் காளர்கள்-3,58,758. பெண் வாக்காளர்கள்- 3,78,678. திருநங்கைகள்- 81 ஆவர்” என்றார். 

Next Story