சூளகிரி, பர்கூர் பகுதிகளில் கனமழை: 2 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து விழுந்தன


சூளகிரி, பர்கூர் பகுதிகளில் கனமழை: 2 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து விழுந்தன
x
தினத்தந்தி 14 May 2019 11:00 PM GMT (Updated: 14 May 2019 9:44 PM GMT)

சூளகிரி பகுதியில் பெய்த கனமழைக்கு 2 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. இதேபோன்று நேற்று பர்கூரில் ஆலங்கட்டியுடன் கன மழை பெய்தது.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் நேற்று முன்தினம் சூறைக்காற்று மற்றும் இடி-மின்னல், ஆலங்கட்டியுடன் கனமழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி தாழ்வான பகுதிகளில் தேங்கி நின்றது. இந்த மழையின் காரணமாக, சூளகிரி முதல் சின்னாறு வரை 16 மின் கம்பங்கள் சரிந்து விழுந்தன. உடனே அந்த பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இந்த மழையின் காரணமாக சூளகிரி பகுதியில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கின. நேற்று காலை முதல் மின்வாரிய ஊழியர்கள் சாய்ந்த மின் கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையின்போது சூளகிரி அருகே எம்.தொட்டி கிராமத்தை சேர்ந்த மாதப்பன் என்ற விவசாயிக்கு சொந்தமான வாழை தோப்பில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. இதேபோல் சூளகிரி பகுதியில் பல்வேறு பகுதிகளில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. வாழை மரங்கள் முறிந்து விழுந்ததால் மாதப்பன் கவலை அடைந்தார். முறிந்து விழுந்த வாழை மரங்களை கணக்கெடுத்து இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

பர்கூர்

இந்தநிலையில் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்று மற்றும் ஆலங்கட்டியுடன் கனமழை பெய்தது. இதனால் வாரச்சந்தை மற்றும் சாலையோரம் விற்பனைக்காக வைத்திருந்த காய்கறிகள், பொருட்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. இந்த மழைநீர் பெருக்கெடுத்து சாலைகளில் ஓடி சாக்கடை கால்வாயில் கலந்ததால் அடைப்பு ஏற்பட்டது. இதனால் மழைநீர் பஸ்நிலைய பகுதியில் சுமார் 2 அடி உயரத்திற்கு பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல சிரமப்பட்டனர்.

தர்மபுரி

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் கடந்த சில நாட்களாக கத்தரி வெயிலால் மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.

இந்தநிலையில் நேற்று திடீரென பலத்த சூறைக்காற்றுடன் பாலக்கோடு பகுதியில் மழை பெய்தது. சுமார் 2 மணி நேரம் ஆலங்கட்டியுடன் மழை கொட்டியது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது.

ஏரியூர் பகுதியில் நேற்று மாலை 4 மணி முதல் சூறைக்காற்று வீசியது.

அரூர், பென்னாகரம்

அரூரில் மாலை 5.45 மணியளவில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. சுமார் அரைமணி நேரம் பெய்த மழையால் ரோடுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது அரூர்-சேலம் மெயின்ரோட்டில் உள்ள கோபிநாதம்பட்டி கூட்டுரோட்டில் சாலையோரம் நின்ற புளிய மரம் ரோட்டில் சாய்ந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வாகனங்களை வேறு பாதையில் திருப்பி விட்டனர். ரோட்டில் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது.

பெரும்பாலை, சின்னம்பள்ளி, பென்னாகரம் உள்ளிட்ட பகுதிகளில் மாலையில் பரவலாக மழை பெய்தது. பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் லேசான சாரல் மழை பெய்தது.

மரம் விழுந்தது

பாப்பாரப்பட்டி, இண்டூர், அதகப்பாடி பகுதிகளில் இடி-மின்னலுடன் மாலை 4 மணி முதல் 5 மணி வரை மழை பெய்தது. பாப்பாரப்பட்டி - தர்மபுரி சாலையில் பாடி மயானம் அருகில் சாலையோரம் நின்ற புளிய மரம் ரோட்டில் சாய்ந்தது. இதனால் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஊராட்சி பணியாளர்கள் அங்கு வந்து மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். அதன்பின்னர் போக்குவரத்து சீரானது. நல்லம்பள்ளி, தொப்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மாலை 5.30 மணி முதல் லேசான சாரல் மழை பெய்தது.


Next Story