திருச்சியை சேர்ந்த 2 வயது சிறுமி வில்வித்தையில் உலக சாதனை


திருச்சியை சேர்ந்த 2 வயது சிறுமி வில்வித்தையில் உலக சாதனை
x
தினத்தந்தி 15 May 2019 10:45 PM GMT (Updated: 15 May 2019 10:24 PM GMT)

திருச்சியை சேர்ந்த 2 வயது சிறுமி வில்வித்தையில் உலக சாதனை தொடர்ச்சியாக ஒரு மணி நேரம் 161 அம்புகளை எய்து அசத்தல்.

திருச்சி,

திருச்சி சீனிவாசாநகரை சேர்ந்தவர் சகாய விஜய் ஆனந்த்-ஜெயலட்சுமி தம்பதியினரின் 2 வயது சிறுமி ஆராதனா. சகாய விஜய் ஆனந்த் திருச்சி கோட்ட ரெயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக பணி செய்கிறார். விளையாட்டில் ஆர்வமிக்க, சிறுமி ஆராதனாவுக்கு கடந்த 3 மாதமாக வில்வித்தை பயிற்சி அளிக்கப்பட்டது. ராக்போர்ட் வில்வித்தை கழக பயிற்சியாளர் ராஜதுரை பயிற்சி அளித்தார்.

இந்த நிலையில் வில்வித்தையில் சாதனை படைக்கும் நிகழ்ச்சி பிரபலங்கள் முன்னிலையில் நேற்று திருச்சி ரெயில்வே மண்டபத்தில் நடந்தது. 10 மீட்டர் தூரத்தில் இருந்து, குறிப்பிட்ட இலக்கை ஆராதனா தொடர்ச்சியாக 1 மணி நேரம் வில்லில் இருந்து அம்புகளை எய்தது. இன்னும் முழுமையாக பேசத்தெரியாத சிறுமி ஆராதனா, எவ்வித அச்சமும் இன்றி 1 மணி நேரம் தொடர்ச்சியாக 161 அம்புகளை எய்து 355 புள்ளிகள் பெற்றது. இது உலகசாதனை ஆகும். நடுவராக கராத்தே பள்ளி நிர்வாகி டிராகன் ஜெட்லி செயல்பட்டார்.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு வில்வித்தை சங்க பொது செயலாளர் உதயகுமார், முன்னாள் மேயர் எமிலி ரிச்சர்டு, அ.ம.மு.க. நிர்வாகிகள் சரவணன், காசி மகேஸ்வரன், திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனர் மயில்வாகனன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஆராதனாவை ஊக்கப்படுத்தி பாராட்டினர்.

ஏற்கனவே, ஆராதனா கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் நடந்த வில்வித்தை போட்டியில் 6 வயதுக்குட்பட்டோர் பிரிவில் பங்கேற்று 3-ம் பரிசை பெற்றார். 10 வயதில் செய்யக்கூடிய வில்வித்தை இலக்கினை 2 வயதில் செய்திருக்கிறது என்றும், இந்த வயதில் 3 மீட்டர் தூரம்தான் இலக்கு நிர்ணயிக்கப்படும். ஆனால், 10 மீட்டர் தூர இலக்கினை நோக்கி அம்பு எய்த நிகழ்வு உலகசாதனை ஆகும் என்று நடுவர்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

Next Story