காளியம்மன் கோவில் குண்டம் விழா : திரளான பக்தர்கள் தீ மிதித்தனர்


காளியம்மன் கோவில் குண்டம் விழா : திரளான பக்தர்கள் தீ மிதித்தனர்
x
தினத்தந்தி 16 May 2019 9:45 PM GMT (Updated: 16 May 2019 4:20 PM GMT)

பெருந்துறை திங்களூரில் காளியம்மன் கோவில் குண்டம் விழாவில் திரளான பக்தர்கள் தீ மிதித்தனர்.

பெருந்துறை, 

பெருந்துறை அருகே திங்களூரில் பிரசித்திப்பெற்ற காளியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவில் குண்டம் விழா கடந்த 1–ந்தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. இதைத்தொடர்ந்து திரளான பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். மேலும் மகா தீபாராதனையும் காட்டப்பட்டது.

முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா நேற்று நடைபெற்றது. முன்னதாக 60 அடி நீளத்தில் அமைக்கப்பட்ட குண்டத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்து கோவில் பூசாரி சிவாச்சலம் தீ மிதித்து தொடங்கியது.

அதைத்தொடர்ந்து ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகள் என திரளான பக்தர்கள் குண்டம் இறங்கினார்கள். மேலும் ஒருசிலர் கைக்குழந்தைகளுடன் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். விழாவில் பெருந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

குண்டம் விழாவையொட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலாதேவி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story