‘கஜா’ புயலுக்குப்பின் நட்ட தென்னங்கன்றுகள் தண்ணீரின்றி காயும் அவலம் விவசாயிகள் விரக்தி


‘கஜா’ புயலுக்குப்பின் நட்ட தென்னங்கன்றுகள் தண்ணீரின்றி காயும் அவலம் விவசாயிகள் விரக்தி
x
தினத்தந்தி 16 May 2019 10:45 PM GMT (Updated: 16 May 2019 7:16 PM GMT)

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் பகுதியில் ஏரிகள் வறண்டு விட்டன. இதன் காரணமாக கஜா புயலுக்குப்பின் நட்ட தென்னங்கன்றுகள் தண்ணீரின்றி காய்ந்து வருவதால் விவசாயிகள் விரக்தி அடைந்து உள்ளனர்.

சேதுபாவாசத்திரம்,

தமிழகத்தில் அதிக அளவு தென்னை சாகுபடி நடைபெறும் பகுதிகளில் தஞ்சை மாவட்டமும் ஒன்று. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட கடைமடை பகுதிகளில் தென்னை சாகுபடியில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தபடியாக முக்கிய வாழ்வாதாரமாக தென்னை சாகுபடி இருந்தது.

கடந்த ஆண்டு (2018) நவம்பர் மாதம் 15-ந் தேதி காவிரி டெல்டாவின் பொருளாதாரங்களை கஜா புயல் வாரி சுருட்டி சென்றது. புயலின் கோர கரங்கள் தஞ்சையின் கடைமடை பகுதிகளில் நெடுநெடுவென வளர்ந்திருந்த தென்னை மரங்களை சாய்த்தன. புயலுக்கு தென்னை மரங்களை பறிகொடுத்த விவசாயிகள் பலர் பாதிப்பில் இருந்து இன்னும் மீளவில்லை.

சேதுபாவாசத்திரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கஜா புயலில் விழுந்த தென்னை மரங்களுக்கு பதிலாக புதிதாக தென்னங்கன்றுகளை நட்டு பராமரித்து வந்தனர். இந்த நிலையில் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் கடும் சரிவை சந்தித்துள்ளது.

சேதுபாவாசத்திரம் பகுதியில் உள்ள ஊமத்தநாடு ஏரி, பெருமகளூர் ஏரி, விளங்குளம் ஏரி, சோலைக்காடு ஏரி, கொரட்டூர் ஏரி உள்ளிட்ட ஏரிகளும் வறண்டு விட்டன. இந்த ஏரிகள் ஒவ்வொன்றும் 1,500 ஏக்கருக்கும் அதிகமான விளை நிலங்களுக்கு பாசன வசதி அளிப்பவை. கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் சரிவை சந்திக்காமல் இருக்க இந்த ஏரிகளில் எப்போதும் தண்ணீர் தேங்கி இருக்க வேண்டியது அவசியமாகும்.

நிலத்தடி நீர்மட்டமும் சரிந்து, ஏரிகளும் வறண்டு விட்டதால் கஜா புயலுக்குப்பின் நட்ட தென்னங்கன்றுகள் தண்ணீரின்றி காயும் அவலம் ஏற்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் விரக்தியில் உள்ளனர். இதுகுறித்து சேதுபாவாசத்திரம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-

ஜீவாதாரமாக இருந்த தென்னை சாகுபடியை இனிமேல் லாபகரமாக மேற்கொள்ள முடியுமா? என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. புயலில் தென்னை மரங்களை இழந்த நாங்கள் தற்போது கோடையின் வறட்சிக்கு தென்னங்கன்றுகளை இழந்து வருகிறோம். தண்ணீர் பற்றாக்குறையால் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு போக நெல் சாகுபடியை கூட செய்ய முடியால் திணறி வருகிறோம்.

இந்த நிலையில் தென்னை சாகுபடியும் கைவிட்டு போய் விட்டது. ஆழ்குழாய் கிணறுகள் அனைத்திலும் நிலத்தடி நீர்மட்டம் 200 அடிக்கு கீழ் போய்விட்டது. தென்னை மரங்களுக்கு போதுமான அளவு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் சிரமத்தில் உள்ளோம். புயலுக்குப்பின் நடப்பட்ட தென்னங்கன்றுகளுக்கும் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் அவை காய்ந்து வருவது வேதனை அளிக்கிறது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உள்ளது.

இவ்வாறு விவசாயிகள் கூறினர். 

Next Story