சங்குப்பேட்டை முத்துமாரியம்மன் கோவில் தேர் வெள்ளோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்


சங்குப்பேட்டை முத்துமாரியம்மன் கோவில் தேர் வெள்ளோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
x
தினத்தந்தி 16 May 2019 10:45 PM GMT (Updated: 16 May 2019 7:38 PM GMT)

சங்குப்பேட்டை முத்துமாரியம்மன் கோவில் புதிய தேர் வெள்ளோட்டத்தில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் சங்குப்பேட்டையில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சங்குப்பேட்டை 11, 12, 13-வது வார்டுகளை சேர்ந்த பக்தர்களின் நன்கொடையால் புதியதாக தேர் ஒன்று செய்யப்பட்டுள்ளது. அந்த புதிய தேருக்கு கடந்த 10-ந் தேதி பூஜை செய்யப்பட்டு கோவில் அருகே நிறுத்தப்பட்டது. இதையடுத்து புதிய தேர் வெள்ளோட்டம் நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு முத்துமாரியம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட தேரில் முத்துமாரியம்மன் எழுந்தருளி தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.

திரளான பக்தர்கள்

பின்னர் பூஜைகள் செய்யப்பட்ட பின் தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகளின் வழியாக சென்ற தேர் மீண்டும் நிலையை அடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். தேர் வெள்ளோட்ட விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர். 

Next Story