மாணவி திலகவதி கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்


மாணவி திலகவதி கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 16 May 2019 10:15 PM GMT (Updated: 16 May 2019 8:10 PM GMT)

மாணவி திலகவதி கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் வாசுகி தெரிவித்து உள்ளார்.

புதுக்கோட்டை,

தமிழக அரசு 28 மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவித்து இருந்தாலும் மத்திய அரசு இதுவரை எந்தவிதமான நிவாரணமும் வழங்கவில்லை. தமிழகத்தை மத்திய அரசு வறட்சி மாநிலமாக அறிவித்து உரிய நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும்.

பெண்கள் தொடர்பான பாலியல் வழக்குகள் மாணவிகளுக்கு ஏற்படும் கொடுமை ஆகியவற்றில் போலீசாரின் விசாரணை திருப்திகரமாக இல்லை. மேலும் மாணவி திலகவதி கொலை வழக்கில் போலீசார் விசாரணை பல்வேறு அய்யத்தை ஏற்படுத்துகிறது. எனவே இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் 5 நோயாளிகள் மின் தட்டுப்பாட்டால் இறந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் மருத்துவமனை நிர்வாகம் அதை மறுத்து இருந்தாலும், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தடையற்ற மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.

சிறப்பு மேற்பார்வையாளர்

தமிழக தேர்தல் அதிகாரி செயல்பாடு திருப்திகரமாக இல்லை. எனவே அவர் உடனடியாக மாற்றப்பட வேண்டும். மேலும் வாக்கு எண்ணிக்கையின்போது இந்திய தலைமை தேர்தல் ஆணையம் சிறப்பு மேற்பார்வையாளர் ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் பாலைவனமாக்க காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு மத்திய அரசு மீண்டும், மீண்டும் அனுமதி வழங்கி வருகிறது. தமிழக அரசு ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

தேனியில் மறு வாக்குப்பதிவு என்பது ஒரு சில பூத்களில் மட்டுமே நடைபெறுகிறது. அதற்காக 70 வாக்குப்பதிவு எந்திரங்களை அங்கு கொண்டு அது பல்வேறு விதமான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தீவிரவாதத்திற்கு மதம் இல்லை. ஆனால் கமல்ஹாசன் கூறிய குற்றச்சாட்டிற்கு மாற்று கருத்து உள்ளவர்கள் பதில் கூறலாமே தவிர, அமைச்சர் ஒருவரே தவறான கருத்தை மிரட்டும் தொனியில் பேசி உள்ளது கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story