குமாரபாளையத்தில் மின்சாரம் தாக்கி ஒப்பந்த ஊழியர் சாவு
குமாரபாளையத்தில் மின் கம்பத்தில் வேலை செய்த போது மின்சாரம் தாக்கி ஒப்பந்த ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
குமாரபாளையம்,
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள ஓலப்பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 58). இவர் குமாரபாளையம் மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வந்தார். நேற்று காலை ஆறுமுகம் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் குமாரபாளையத்தில் ஆனங்கூர் பிரிவு ரோட்டில் மின் கம்பத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அங்குள்ள மின் கம்பத்தில் ஏறி ஆறுமுகம் வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது அவர் மீது திடீரென மின்சாரம் தாக்கியது. இதில் அவர் மின் கம்பத்திலேயே பிணமாக தொங்கினார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள் உடனே மின் இணைப்பை துண்டித்தனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கும், குமாரபாளையம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் இறந்த ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக ஆறுமுகத்தின் மகன் குமரவேல் குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின் கம்பத்தில் பராமரிப்பு பணியின் போது மின்சாரம் தாக்கி ஒப்பந்த ஊழியர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story