விளைநிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றவர் கைது


விளைநிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றவர் கைது
x
தினத்தந்தி 18 May 2019 11:15 PM GMT (Updated: 18 May 2019 6:53 PM GMT)

செம்பனார்கோவில் அருகே விளை நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குழாய் பதிக்கும் பணியை கண்டித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டத்தில் ஈடுபட முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.

பொறையாறு,

நாகை மாவட்டம் சீர்காழி அருகே மாதானம் கிராமத்தில் இருந்து நாங்கூர், காத்திருப்பு, தலச்சங்காடு, காளகஸ்திநாதபுரம் வழியாக மேமாத்தூர் வரை 29 கிலோ மீட்டர் தூரத்திற்கு கெயில் நிறுவனம் சார்பில் விளைநிலங்களில் எரிவாயு கொண்டு செல்லும் ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி செம்பனார்கோவில் அருகே உமையாள்புரம், முடிகண்டநல்லூர் உள்பட பல கிராமங்களில் விளைநிலங்களில் ராட்சத குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்கு அந்த பகுதி விவசாயிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த பணியின்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள விளைநிலங்களில் பயிர்களை சேதப்படுத்தி குழாய்கள் பதிப்பதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மற்றும் நிலம், நீர் பாதுகாப்பு இயக்கத்தினர் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்தின்போது ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் எடுப்பதற்காகவே விளைநிலங்களில் ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது. இதனால் விளைநிலங்கள் கண்டிப்பாக பாழாகும். எனவே, விளைநிலங்களில் ராட்சத குழாய்கள் பதிக்கும் பணியை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முடிகண்டநல்லூர் கிராமத்தில் உள்ள ஒரு வயலில் நடவு செய்த பயிர்களை சேதப்படுத்தி குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்றது. அப்போது நிலம், நீர் பாதுகாப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் இரணியன் தலைமையில் விவசாயிகள் சேறு பூசிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து செம்பனார்கோவில் போலீசார், இரணியன், விஷ்ணுகுமார், பாலன் உள்பட 8 பேர் மீது நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து விவசாயிகள் ஒருபுறம் போராட்டம் நடத்தி வந்தாலும் மறுபுறம் கெயில் நிறுவனத்தினர் போலீஸ் பாதுகாப்புடன் குழாய்கள் பதிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பணியை கண்டித்து நேற்று மீண்டும் உமையாள்புரம் கிராமத்தில் விவசாயிகளை ஒன்று திரட்டி நிலம், நீர் பாதுகாப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் இரணியன் போராட்டம் நடத்த முயன்றார். இதனை அறிந்த செம்பனார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட முயன்ற இரணியனை கைது செய்தனர்.

கெயில் நிறுவன குழாய் பதிக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட முயன்றவரை போலீசார் கைது செய்த சம்பவத்தால் அந்த பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story