வாகன நிறுத்தும் இடம் கட்டுவதற்காக ‘திருச்சி சிட்டி கிளப்’ கட்டிடம் இடித்து தரைமட்டம் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை


வாகன நிறுத்தும் இடம் கட்டுவதற்காக ‘திருச்சி சிட்டி கிளப்’ கட்டிடம் இடித்து தரைமட்டம் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை
x
தினத்தந்தி 18 May 2019 11:00 PM GMT (Updated: 18 May 2019 7:42 PM GMT)

வாகன நிறுத்தும் இடம் கட்டுவதற்காக ‘திருச்சி சிட்டி கிளப்’ கட்டிடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. மாநகராட்சி நிர்வாகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

மலைக்கோட்டை,

திருச்சி மேலபுலிவார்டு சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான 3 ஆயிரத்து 889 சதுர மீட்டர் நிலத்தில், ‘திருச்சி சிட்டி கிளப்’ என்ற பெயரில் மனமகிழ் மன்றம் செயல்பட்டு வந்தது. முக்கிய பிரமுகர்கள் இந்த கிளப்பில் உறுப்பினர்களாக உள்ளனர். இங்கு டென்னிஸ், பில்லியார்ட்ஸ், செஸ் உள்ளிட்ட விளையாட்டுகளை பொழுதுபோக்காகவும், சீட்டு விளையாட்டு விளையாடுவதும் வழக்கம்.

கடந்த 1905-ம் ஆண்டு முதல் 1985-ம் ஆண்டு வரை திருச்சி மாநகராட்சியிடம் மாத வாடகை ரூ.1,689 என்ற ஒப்பந்த அடிப்படையில் கிளப் இயங்கி வந்தது. ஒப்பந்தம் முடியும் தருவாயில் மீண்டும் மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கடந்த 2013-ம் ஆண்டுவரை உரிமம் நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில், சிட்டி கிளப் இடமானது, திருச்சியை பொலிவுறு நகரமாக (ஸ்மார்ட் சிட்டி) மாற்றும் திட்டத்திற்கு தேவை என்பதால், அதை காலி செய்யுமாறு மாநகராட்சி தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டு கிளையில் சிட்டி கிளப் நிர்வாகிகள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் திருச்சி மாநகராட்சிக்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 3 மணிக்கு, திருச்சி சிட்டி கிளப்பை 12 மணி நேரத்தில் காலி செய்திட வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. நோட்டீசை கிளப் நிர்வாகிகள் வாங்க மறுத்ததால், கிளப் சுவற்றில் அந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டது. ஆனாலும், நிர்வாகிகள் தரப்பில் 2 நாட்கள் காலஅவகாசம் கேட்கப்பட்டது.

அதை மாநகராட்சி நிர்வாகம் ஏற்கவில்லை. காலி செய்யாவிட்டால், சிட்டி கிளப் பூட்டி ‘சீல்’ வைக்கப்படும் எனவும் மாநகராட்சி எச்சரித்து இருந்தது.

இந்த நிலையில் நேற்று காலை 6 மணிக்கு, மேலப்புலிவார்டு சாலையில் அமைந்துள்ள திருச்சி சிட்டி கிளப் கட்டிடத்தை இடித்து அகற்றும் நோக்கில், மாநகராட்சி நகர பொறியாளர் அமுதவல்லி தலைமையில் 5 பொக்லைன் எந்திரம், 20 லாரிகள் மற்றும் 200 பணியாளர்கள் குவிந்தனர். மேலும் கோட்டை போலீஸ் உதவி கமிஷனர் சந்திரசேகர், இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்குமரன், சப்-இன்ஸ்பெக்டர் சிற்றரசு உள்ளிட்ட போலீசாரும் அங்கு பாதுகாப்பு பணிக்காக வந்தனர்.

மாநகராட்சி நிர்வாகம் ‘சீல்’ வைப்பதாக கூறிவிட்டு, தற்போது சிட்டி கிளப்பை இடிக்கும் நோக்கில் வந்துள்ளதை அறிந்து கிளப் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். கிளப் தலைவர் கேசவன் தலைமையிலான 11 பேர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த இடத்தில் மாநகராட்சி நிர்வாகம், வாகன நிறுத்தும் இடம் கட்டி தனியாருக்கு குத்தகைக்கு விட திட்டமிட்டுள்ளது. அதை அனுமதிக்க முடியாது என தெரிவித்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களை கோட்டை போலீசார் கைது செய்தனர்.

அதன் பின்னர் கட்டிடத்தை இடித்து அகற்றுவதற்கான பணிகள் தொடங்கியது. முதலில் சிட்டி கிளப்பில் உள்ள மின் விசிறிகள், நாற்காலிகள், பீரோ, பூப்பந்துகள், ஏராளமான சீட்டு கட்டுகள் உள்ளிட்டவை அப்புறப்படுத்தப்பட்டன. கிளப்பில் என்னென்ன இருந்தன என்பதை ஆதாரபூர்வமாக அறியும் வகையில், அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்ட பொருட்கள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அந்த பொருட்கள் அனைத்தும் ஸ்ரீரங்கத்தில் உள்ள கிளப் ஒன்றின் அறையில் வைத்து பூட்டப்பட்டது.

அதைத்தொடர்ந்து சிட்டி கிளப் கட்டிடம் பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்கப்பட்டது. இடிபாடுகள் அனைத்தும் உடனடியாக லாரிகளில் ஏற்றி அப்புறப்படுத்தப்பட்டன. கட்டிடம் இடித்து தரைமட்டம் ஆக்கப்படும் வரையில், அப்பகுதியில் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. சிட்டி கிளப் அமைந்திருந்த இடத்தில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின்கீழ் ‘மல்டிலெவல்’ கார் பார்க்கிங் அமைய உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

Next Story