திருவதிகை வாக்குச்சாவடியில் இன்று மறுவாக்குப்பதிவு - பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடக்கிறது


திருவதிகை வாக்குச்சாவடியில் இன்று மறுவாக்குப்பதிவு - பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடக்கிறது
x
தினத்தந்தி 18 May 2019 10:00 PM GMT (Updated: 18 May 2019 7:57 PM GMT)

திருவதிகை வாக்குச்சாவடியில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மறுவாக்குப்பதிவு நடக்கிறது.

கடலூர்,

கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு கடந்த மாதம் 18-ந்தேதி தேர்தல் நடந்தது. அப்போது இத்தொகுதிக்குட்பட்ட பண்ருட்டி திருவதிகை பாவாடைசாமி பிள்ளை நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் 210-ம் எண் வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழக வேட்பாளருடைய சின்னத்தின் பட்டன் இல்லை. இதனால் அந்த வாக்குச்சாவடிக்கு மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று அ.ம.மு.க. வேட்பாளர் காசி.தங்கவேல் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு புகார் அனுப்பினார்.

இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவின் பேரில் தேர்தல் ஆணையத்துக்கு தேர்தல் நடத்தும் அதிகாரியான கலெக்டர் அன்புசெல்வன் அறிக்கை அளித்தார். அதன் அடிப்படையில் திருவதிகையில் உள்ள 210-ம் எண் வாக்குச்சாவடிக்கு கடந்த மாதம் 18-ந்தேதி நடந்த தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அந்த வாக்குச்சாவடிக்கு இன்று(ஞாயிற்றுக்கிழமை) மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் ஆணை பிறப்பித்தது.

அதன்படி திருவதிகையில் உள்ள 210-ம் எண் வாக்குச்சாவடியில் இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மறுவாக்குப்பதிவு நடக்கிறது.

இதற்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், வி.வி.பேட் கருவியும், பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில் இருந்து திருவதிகை வாக்குச்சாவடிக்கு நேற்று மாலையில் கொண்டு வரப்பட்டது. வாக்குச்சாவடி அலுவலர்களும் நேற்று மாலையிலேயே பணிக்கு வந்து வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடுகளை செய்தனர்.

மறுவாக்குப்பதிவின் போது எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க திருவதிகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன் தலைமையில் 150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இந்த வாக்குச்சாவடி முழுவதும் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. மறுவாக்குப்பதிவை பார்வையிடுவதற்காக தேர்தல் ஆணையத்தில் இருந்து பார்வையாளர்களாக கணேஷ் பாட்டீல்(பொது பார்வையாளர்), தேவராஜூ(போலீஸ் பார்வையாளர்) ஆகியோர் கடலூருக்கு வந்து உள்ளனர். அவர்கள் இருவரும் நேற்று பிற்பகலில் திருவதிகை வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று மறுவாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை பார்வையிட்டனர்.

மாலை 6 மணிக்கு மறுவாக்குப்பதிவு முடிவடைந்ததும், வாக்குகள் அடங்கிய மின்னணுவாக்குப்பதிவு எந்திரங்களும், வி.வி.பேட் கருவியும் வாக்குச்சாவடியில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலூருக்கு எடுத்து வரப்பட்டு, வாக்கு எண்ணிக்கை மையமான தேவனாம்பட்டினம் அரசு கலைக்கல்லூரியில் வைக்கப்பட உள்ளது.

அங்கு வருகிற 23-ந்தேதி காலை 8 மணிக்கு கடலூர் நாடாளுமன்ற தொகுதியின் வாக்குகள் எண்ணப்பட உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கலெக்டர் அன்புசெல்வன் செய்து உள்ளார்.

Next Story