ஓட்டப்பிடாரம் இடைத்தேர்தல்: நுண்பார்வையாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த பயிற்சி கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடந்தது


ஓட்டப்பிடாரம் இடைத்தேர்தல்: நுண்பார்வையாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த பயிற்சி கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 18 May 2019 11:00 PM GMT (Updated: 18 May 2019 8:10 PM GMT)

ஓட்டப்பிடாரம் இடைத்தேர்தலில் பணியாற்றும் நுண்பார்வையாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த பயிற்சி கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடந்தது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பணியாற்றும் நுண்பார்வையாளர்கள் வாக்குப்பதிவு மற்றும் வாக்குப்பதிவு முடிவடைந்தபின் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பயிற்சி கூட்டம் நடந்தது.

மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பொது பார்வையாளர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சந்தீப்நந்தூரி பேசியதாவது;-

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் 257 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நுண்பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நீங்கள் மாதிரி வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு முன்பாக தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு உரிய நேரத்தில் செல்ல வேண்டும். மேலும் மாதிரி வாக்குப்பதிவு செய்யும் நடைமுறைகளை நன்றாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். மாதிரி வாக்குப்பதிவு முடிந்த உடன் அதற்கான ஆவணங்களில் வேட்பாளர்களின் முகவர்களிடம் தவறாமல் கையெழுத்து பெறுதலை கண்காணிக்க வேண்டும்.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கப்படுவதையும், வாக்குப்பதிவு தொடக்கத்துக்கு முன்பாக மாதிரி வாக்குப்பதிவுகளை தவறாமல் அழிக்கப்படுகிறதா என்பதையும், வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெறும்போது வேட்பாளர்களின் முகவர் ஒருவர் மட்டும் தான் அனுமதிக்கப்பட்டுள்ளாரா? என்பதையும் கண்காணிக்க வேண்டும்.

சட்டம், ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புகள் இருந்தால் உடனடியாக பொது பார்வையாளரிடம் தெரிவிக்க வேண்டும். இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் தாங்கள் மேற்கொள்ளும் அனைத்து பணிகளும் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படும் என்பதை மனதில் கொண்டு பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பணியாற்றும் நுண்பார்வையாளர்களுக்கு அடையாள அட்டை மற்றும் தேர்தல் பணிக்கான உத்தரவு கடிதம் வழங்கப்பட்டது.

இந்த பயிற்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், மகளிர் திட்ட அலுவலர் ரேவதி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சண்முகசுந்தரம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) மரகதநாதன், தேர்தல் தனி தாசில்தார் நம்பிராஜன் மற்றும் நுண்பார்வையாளர்கள் கலந்துகொண்டனர்.

Next Story