பொன்மலை ரெயில்வே பணிமனையில் தேங்கிய மழைநீர் ஊழியர்கள் பணி செய்ய மறுத்ததால் பரபரப்பு


பொன்மலை ரெயில்வே பணிமனையில் தேங்கிய மழைநீர் ஊழியர்கள் பணி செய்ய மறுத்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 18 May 2019 11:00 PM GMT (Updated: 18 May 2019 8:45 PM GMT)

திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையில் தேங்கிய மழை நீரில் ஊழியர்கள் பணி செய்ய மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி,

திருச்சி பொன்மலையில் ரெயில்வே பணிமனை அமைந்துள்ளது. இங்கு ரெயில் பெட்டிகள், என்ஜின்கள், வீல்கள், வேகன்கள் உள்ளிட்டவை பராமரிப்பு செய்யப் படுகிறது. பணிமனையில் மொத்தம் 26 பிரிவுகளில் பராமரிப்பு பணிகளை ரெயில்வே ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரெயில்வே ஊழியர்கள் பணிமனையில் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் திருச்சியில் நேற்று முன்தினம் மாலை திடீரென மழை பெய்தது. இந்த மழைநீர் சிறிது நேரம் இடைவிடாமல் பரவலாக பெய்தது. இதனால் பொன்மலை ரெயில்வே பணிமனையில் பல்வேறு பிரிவுகளின் வளாகத்தில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியது. குறிப்பாக ரெயில்களின் வீல்கள் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும் பிரிவில் மழைநீர் அதிக அளவில் தேங்கி நின்றது.

இந்த நிலையில் நேற்று காலை பணிமனைக்கு ஊழியர்கள் பணிக்கு வந்தனர். வீல்கள் பிரிவில் மழைநீர் தேங்கி கிடந்ததால் அங்கு பணியாற்ற ஊழியர்கள் ஆலோசித்தப்படி நின்றனர். அப்போது அதிகாரிகள் பணியை மேற்கொள்ளும்படி ஊழியர்களை அறிவுறுத்தினர்.

ஆனால் தேங்கி கிடந்த மழைநீரில் பணி செய்ய ஊழியர்கள் மறுத்தனர். மேலும் தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் அங்கு விரைந்து வந்தனர். மழைநீர் தேங்கி கிடப்பது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த உயர் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி ஊழியர்களை சமாதானப்படுத்தினர். மேலும் தேங்கிய மழைநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தனர். அதன்பின் ஊழியர்கள் பணிக்கு திரும்பினர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் பணிமனையில் அடிப்படை வசதிகளை பராமரிக்க வேண்டும் என்பதே ஊழியர்களின் கோரிக்கையாக உள்ளது.

இது குறித்து ரெயில்வே பணிமனை ஊழியர்கள் கூறியதாவது:-

பொன்மலை ரெயில்வே பணிமனையில் மே மாதத்தில் ஒரு வாரம் விடுமுறை விடப்படுவது வழக்கம். இந்த விடுமுறை சமீபத்தில் விடப்பட்டது. இந்த விடுமுறை தினத்தில் பணிமனையில் அடிப்படை வசதிகளை பராமரிக்க வேண்டும். ஆனால் ரெயில்வே நிர்வாகம் எவ்வித பணிகளையும் மேற்கொள்ளவில்லை. பணிமனையில் உள்ள பல்வேறு பிரிவுகளின் மேற்கூரைகள் சேதமடைந்துள்ளன.

இதனால் அதன் வழியாக மழைநீர் பணிமனைக்குள் விழுந்து தேங்குகிறது. இதேபோல பணிமனையின் உள்ளே மழைநீர் வடிகால் வசதி சரியான முறையில் இல்லை. மேலும் கழிவு நீர் செல்லும் வடிகால்களிலும் பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. மழை நீரோடு சாக்கடை நீரும் கலந்து வளாகத்தில் தேங்கிநிற்கிறது. எனவே இவற்றை சரி செய்ய ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

Next Story